ஊழிக்காற்று வீசிய வேகம்...
உஷ்ணத்தின் உச்சகட்டம்
நெகிழ்ந்து போன சமயம்....
கனவுலகில் விழித்து...
உணர்வுகளின் கட்டைப் பஞ்சாயத்து!
யார்?
யார் நான்?
என்று மனம்
கண்ணாடி பார்த்து
கேட்டது.
பிம்பங்கள் ஒன்றொன்றாய்
வேஷங்கள் காட்ட
மனம் சிரித்தது.
நான் யாரென்றால்
நாலுவிதமாய்த்தான் இருக்கும்...
என்ன சிரிப்பு? எக்காளம்?
மனம் தனக்குள்ளே
முனுமுனுத்தது.
மனதின் மனம்
பிம்பங்களாய்...
பிம்பங்களின் பிதற்றலில்
மனம் மயங்கிக் கிரங்கியது....
என்னைத் தேடிய மனமும்
மனதைத் தேடிய நானும்
பிம்பங்களில்
அனாதைகளாய் பிரிந்த போது
யாரோ இட்ட பிச்சையாய்
நிஜமும் மாயையும்
நிர்வாணமாய்....
வாழ்வு என்ற பெயரில்
பலவந்தமாய்
என்னை ஒருபுறம்
மனதை ஒரு புறம்
பலாத்காரம் செய்தது....
நிமிடங்களை
சுருட்டி கட்டிய போது
மாயங்களின்
கிரகத்தில் பயணித்தேன்...
இணைந்த உடல்களின்
இன்பத்தில் உருவானேன்...
உள்ளங்கள் ஒன்றாக
நானே உயிரானேன்.
உலகிற்கு அறிமுகமாய்
இன்னொரு ஜீவனாய்
ஒருவழிப் பாதையில்
நானும் நடப்பானேன்.
தேவைகள், தேடல்கள்
வயிறும் காமமும்
ஆசைகள் அடைதல்
அன்றும் இன்றும்
வழிவழி மரபுகள்.
நானும் மனமும்
என்று சேர்வோம்?
வேகமும் அயர்வும்
கோபமும் தாபமும்
அடையும் வேட்கையும்
கொலையும் கொள்ளையும்
எல்லாம் எதற்கு?
எங்கோ எப்போதோ
ஏனோ பிரிந்த
மனதும்
நானும்,
கனவுலகின் கதவிடுக்கில்
காற்றாய்ப் பயணித்தோம்.
வாழ்க்கை கனவா என்று
கேட்கவும் விரும்பாமல்
வழிகளில் ஓடும்
விழிகள் இல்லாமல்
பயனித்தோம்.
அனாதைகளாய்
வாழ்க்கை என்னும் போதிமரத்தினடியில்
காணாத நெருக்கங்களில்
வாடிக்கைப் பிறவிகளாய்....
என்றாவது ஒரு நொடி
என் மனமும் நானும்
இணைவோமா?