Sunday, June 16, 2013

நீயில்லையேல்.... பரவாயில்லை

நீயில்லையேல் 
நானில்லை 
என்ற மொழிகளின் 
சுகங்கள் 

காதலின் கரைகளில் 
கைபிடித்த 
தினங்கள் 

போகின்ற வழிதனில் 
புதைகின்ற 
கணங்கள் 

காலத்தின் விழிகளில் 
கற்பனைகள் ஆவியாக.... 

நிகழ்காலத் தராசில் 
நிதர்சனங்கள் நிறுக்கப்பட 

வெளியே இனைந்தும் 
ஒட்டாத உறவுகள் 

சுயநலம் சுமந்த 
சுழற்சியின் அழற்சிகள் 

காதலும் ஒருவகை 
கணக்கு போல் 
சுவைத்து துப்பிய 
எச்சிலின் கரைகள் 

பணத்திலும் பகட்டிலும் 
நிறுவை இட்ட 
உள்ளத்தின் வலிகள்... 

முதல்நாள் காதல் 
மறுநாள் விவாகம் 
தொடரும் விவாதம் 
விரைவில் கோணல் 
விவாக ரத்துக்கள் 

கற்பனை தந்த 
வலியில் வதைகள் 

இன்றும்.... 

தொடர்கின்ற கனவுகளின் 
நீண்ட உபாதைகள். 

நிஜங்களின் இடைகளில் 
பிரிகின்ற பாதைகள்... 

இணைவது போலே 
இனையாத நிலைகள்.... 

இருந்தும் இல்லாமல் 
வருகின்ற முடிவுகள்... 

நீயில்லையேல் பரவாயில்லை 
என்ற நிலைகள் 

இன்றைய உலகின் 
காதல் காவியங்கள் 

.........
முகில்