Sunday, June 16, 2013

நீயில்லையேல்.... பரவாயில்லை

நீயில்லையேல் 
நானில்லை 
என்ற மொழிகளின் 
சுகங்கள் 

காதலின் கரைகளில் 
கைபிடித்த 
தினங்கள் 

போகின்ற வழிதனில் 
புதைகின்ற 
கணங்கள் 

காலத்தின் விழிகளில் 
கற்பனைகள் ஆவியாக.... 

நிகழ்காலத் தராசில் 
நிதர்சனங்கள் நிறுக்கப்பட 

வெளியே இனைந்தும் 
ஒட்டாத உறவுகள் 

சுயநலம் சுமந்த 
சுழற்சியின் அழற்சிகள் 

காதலும் ஒருவகை 
கணக்கு போல் 
சுவைத்து துப்பிய 
எச்சிலின் கரைகள் 

பணத்திலும் பகட்டிலும் 
நிறுவை இட்ட 
உள்ளத்தின் வலிகள்... 

முதல்நாள் காதல் 
மறுநாள் விவாகம் 
தொடரும் விவாதம் 
விரைவில் கோணல் 
விவாக ரத்துக்கள் 

கற்பனை தந்த 
வலியில் வதைகள் 

இன்றும்.... 

தொடர்கின்ற கனவுகளின் 
நீண்ட உபாதைகள். 

நிஜங்களின் இடைகளில் 
பிரிகின்ற பாதைகள்... 

இணைவது போலே 
இனையாத நிலைகள்.... 

இருந்தும் இல்லாமல் 
வருகின்ற முடிவுகள்... 

நீயில்லையேல் பரவாயில்லை 
என்ற நிலைகள் 

இன்றைய உலகின் 
காதல் காவியங்கள் 

.........
முகில்


Thursday, May 23, 2013

நான் என்ற கிரகம்



















ஏதோ ஒரு எண்ணம்
ஏதோ ஒரு ஏக்கம்
என்னுள் சுற்றிய நான்
கிரகிக்க முடியாத கிரகம்

தோராயணம் அறியாத
துல்லியம்
நீள் அகலப் பாதைகளில்
எனக்கு நான் கண்ட
நிதர்சனம்

அங்குலங்கள் நகர்ந்த 
பொழுதுகளில்
என் சுயங்கள் தொலைந்த 
பூகோளம்

சுதந்திரம் இருந்தும் 
முடங்கிய கைதியாய்
சுற்றிடும் கோள்களில்
சோதனைச் சரித்திரம்

ஒரே வழியில்
ஒரே பயணம்.
பச்சோந்தி போல் 
பல அரிதாரம்
என்னைக் காணத் 
தேடிய ஆடிகள்

பிறவியின் ஆழியில்
வெவ்வேறு பிம்பங்களாய்
என்னை நான் வேஷித்தேன்

அன்னையின் மடிவிட்ட
நொடி முதலாய்
தொடங்கிய 
அழுகையும் ஏக்கமும்
வாழ்க்கைத் தின்னை
விட்டகலும் வரை...

அடையாளங்கள் காட்டிய
ஆடிகளின் பிரதிபலிப்பில்
எரிகின்ற சுடராய்
என் ஆத்மா...

சுயத்தின் சாலைகளில்
என் தேடலின்
அறிகுறியாய்

ஏதோ ஒரு எண்ணம்
ஏதோ ஒரு ஏக்கம்
என்னுள் சுற்றிய நான்
கிரகிக்க முடியாத கிரகம்
ஆதியும் இல்லாமல்...
அந்தமும் இல்லாமல்...

....................முகில்

Tuesday, May 21, 2013














மாறாதா என் பாரதம்? 

பாருக்குள்ளே நல்ல நாடு
எங்கள் பாரத நாடு.
உண்மைதான் பாரதி....

ஒரு தாத்தா
வயதாகிவிட்ட
உன்னை
இன்னும் ஒரு தோழனாகவே
எண்ணும் பாங்கில்
இதயத்தில் வாழ்கின்றாய்

ஆகவே
உன் சொற்களே
என்னில் வந்தன.

பாருக்குள்ளே நல்ல நாடு
பாரத நாடு.

உன் கனவு
உன் போராட்டம்
உன் உணர்வுகள்...
நீயிருந்த காலம்
இன்று
இறந்த காலம்!

இன்று ...
பாரதம் படும் பாடு
சுதந்திரம் பெற்ற பின்னும்
சுற்றி வரும் கேடு.

ஆளவந்த அந்நியர்
போய்
அரசியல் என்ற பெயரில்

அந்நியனை மிஞ்சிய
அராஜகம்
இந்தியனே செய்கின்றான்.

கோடிகள் பெருக்கும்
நோக்கில்
அரசியல் களம் குதிக்கும்
உடன் பிறவா சகோதரர்கள்....

சுயராச்சியம்
எமது பிறப்புரிமை
என்று போரிட்டுப்
பெற்ற சுதந்திரம்.

இன்று
ஓட்டுகள் பெறுவதும்
உயர்ந்த பதவிகள் பெறுவதும்
சுயநலம் காப்பதும்
எம் பிறப்புரிமை
என்று
பொய்யர்கள் கூட்டமாய்
அரசியல் நேதாக்கள்

தேசத்தின் மீது
பற்றில்லை
நேசத்தின் நிழல் கூட
சற்றில்லை....

நூற்றி இருபது லட்சம் உயிர்கள்...
இந்திய சனநாயகம்....
மனிதரைப் பெருக்கும்
உற்பத்திச் சாலையில்
உலகில் இரண்டாம் இடம்.

காய்ந்து வரும் விளைநிலம்
காணாமல் போன விவசாயி
வயிற்றிற்குக் வழி
கிடைத்தால்
போதும்
சாலையோரமும்
மாளிகையே
என்று வாழும்
புழுதியாத்மாக்களும்

ஏதோ ஒரு வேலை
ஒரு வருமானம்
ஒரு சிறு குடும்பம்
எனது உலகம்
என்று
அன்றாடம் கழிந்தால்
போதும் என்ற
வாழ்க்கை ஓட்டிகளும்

கல்வி என்ற
விலைபொருளை
சந்தைகளில் பெற்றிடும்
கன்றுக்குட்டிகளும்

மதிப்பெண் பெற்றாலே
மனிதக்கடலில் நீந்திடலாம்
என்ற நியதிகளில்
வாழ்க்கையறிய
வழியில்லாமல்
வாழ்வை உணர
வகையில்லாமல்
போடும் போட்டியிலே
தூக்கில் தொங்குவதும்
விஷத்தை அருந்துவதுமாய்
மாணவர் சமுதாயம்.

சாதிகள் இல்லா சமுதாயம்
கேட்டாய்.
இன்றும்
சாதிகளில் இனம் பிரிக்கும்
சாத்திரங்கள்
சூத்திரங்கள்
மனிதம் கொல்லும்
சூட்சுமங்கள்...

வேலியே பயிரை மேய்வது போல்
நமக்காக நாம்
ஏற்படுத்திய
அமைப்புகள்
நம்மையே வேட்டையாடும்
நரகச் சூழல்கள்

கொலை வெறியும்
கோரமுமாய்
பெண்களின் நிழலையும்
கற்பழிக்கும் பித்தர்கள்

மிருகமே மிகுந்து
சிசுவையும்  
பலாத்கரிக்கும்
கிராதகர்கள்

சொத்து சுகம்
என்ற
சுயச் சேர்க்கைகளில்
அண்ணனும் தம்பியுமே
பகையாளிகள்

அடுத்தவன் என்றால்
அதனினும் கொடுமையே...

இல்லாமை இல்லாத
நிலை வேண்டும்
என்பதனால்
மனிதம் தொலைத்தா
வாழ்வை தேடுவது?

மனம் ஒத்த நிலை
மனித நிலை என்ற
மைய நிலை விட்டு
பணமென்ற பொருளின் பின்
தினமலையும் நிலை பெற்ற
புதிய வாழ்க்கை

அழுபவன் அழுவதும்
வலியில் அழிப்பதும்
அழிவதுமாய்
லஞ்சம், ஊழல்,
கொலை, கொள்ளை
பலாத்காரம், கற்பழிப்பு
என்று
நவீன பாரதத்தின்
அன்றாட வாழ்க்கை

இதுவே யதார்த்தம்
என்று பழகி
இதற்குள் அடிமையாகி விட்ட
எமது பாரத மக்கள்

என்று தனியும் இந்த சுதந்திர தாகம்
என்று
இன்றும்
பாடிக் கொண்டுதான் இருப்பாய்
நீ இருந்தாலோ பாரதி...

நல்லதோர் வீணை செய்தே
அதை நலம் கெடப்
புழுதியில் எறிவதுண்டோ?

ஏழ்மை இல்லாத நிலை
எல்லார்க்கும் ஒரு தொழில்
யாவர்க்கும் நல்ல வசிப்பிடம்
அனைவரும் மனிதரென்ற
பரஸ்பர உரிமையை
பாகுபாடன்றிப் பெறும் நிலை
கல்வி
என்ற செல்வம்
சமத்துவமாய் இலவசமாய்
மாணவர் பெறும் நிலை
லஞ்சமும் ஊழலும்
இல்லாத
சமுகம் காக்கும்
நல்லவர் சேர்ந்த
அரசியல் வேண்டும்

உனைப் போன்ற
உயிர்கள் வேண்டும்
உனைப் போன்ற
உள்ளம் வேண்டும்....

நல்லதோர் வீணை செய்தே
அதை நலம் கெடப்
புழுதியில் எறிவதுண்டோ?

அழுகின்ற மனதினுள்
எழுகின்ற கோபங்கள்
மாறாதா பாரதம்
என்றே என் தாபங்கள்....

................................முகில்









Monday, May 13, 2013















ஒரு அறிவிப்பு: 
என் கிராமத்தைக் கண்டால் சொல்லுங்கள்...

நீண்ட காலம்...
கழித்து
மறுபடியும்
என் கிராமம்.

வாழ்க்கையின் வழி ஓடி
சக்கரச் சுழற்சியிலே
இக்கரை வந்த நேரம்

பத்து வருடங்கள்...
3650 நாட்கள்தானே!

என் கிராமம்
என்ற அடையாளங்கள்...
தேடிய என் கண்களில்...

வானம் தொடும்
தொலைவு வரை
பசுமை படர்ந்த
காட்சிகள் தொலைந்து
காய்ந்த புல்லும்
கருவேல முள்ளுமாய்...
உஷ்ணம் பறந்த
உக்கிரம் கண்டேன்...

சிறுசிறு செங்கற்களை
நட்டு
வீட்டுமணை விற்ற
நவின விவசாயம்
கண்டேன்.

தென்னைகளும் பனைகளும்
உரசிய ஓலைகளின்
சங்கீதம் மாறி
உயர்ந்து ஓங்கிய
காற்றாடி ஆலைகளின்
உவ்...உவ்.. என்ற
ராட்சச உறுமல்கள்...

கைகாட்டி தொடங்கி
ஊர் ஆலமரம்
ஒரு கிலோமீட்டர்.

இரண்டு பக்கமும்
சிந்தை மயக்கிய
நெற்பயிரும் சோளமும்
சூரிய காந்திப் பூக்களும்
புதிதாய் முளைத்த
கட்டிடக் கல்லறைகளில்
புதைந்தது கண்டேன்.

வறண்ட பனையன்குளம்
சிதிலமடைந்த
பாட்டாரித் தாத்தா
பருப்புத் தாத்தா
பம்பு செட்டுகள்

அழகாய்
பசுமை அணிந்து
காற்றிலாடி
நின்ற
கரை மரங்கள்
நிர்வாணமாய்க்
காய்ந்த உடல்
காட்டி
வாடி நிற்க

விளைநிலம் யாவும்
ஏதாவதொன்றாய்...

இயற்கை தேடிச் சென்ற
இடமெலாம்
செயற்கை புகுத்திய
செயல்கள் கண்டேன்....

ஒரே ஊருக்குள்
ஒரே தெருவுக்குள்
கைப்பேசி அழைப்புகள்
பரிமாறக் கண்டேன்.

வீட்டிற்கு வீடு
வீட்டுமனை விற்கும்
முகவர்கள் கண்டேன்.

முன்பிருந்த ஞாபகங்கள்
முகவரியற்று
வழிமாறிச் சென்றுவிட்ட
இனம்புரியாப் பயமாய்..
இதயம் படபடத்தது.

கருதறுக்கும் பெண்களில்லை
கஞ்சி சுமக்கும் சிறுசுகளில்லை
உழுகின்ற உழவரில்லை
சனிக்கிழமை சந்தையில்லை
ஓடுகின்ற மதகில்லை
தண்ணி பாச்சும் சின்னனஞ்சி இல்லை....

நடந்தேன்...நடந்தேன்... நடந்தேன்....
தூரத்தில் அசைந்த
ஒரு உருவம்....

ஆவலாய் அருகே
சென்றேன்.

65 வயதிருக்கும்...
தனியே தன் நிலத்தில்...
ஒற்றையாய்
மண்வெட்டியுடன்....

தாத்தா...
என்ன இது தனியே
உதவிக்கு ஏன்
யாருமில்லை?
கேட்டேன்.

அட என்ன தம்பி....
விவரம் தெரியாத
ஆளா இருக்கிக....

ஊரல்லாம்
ஒருத்தன் இல்ல...
மதுரக்கும் சென்னைக்குமா
ஒடிட்டாங்க....

விவசாயம் செத்து
பல நாளாச்சுப்பா...

எனக்கு மட்டும்
விடமுடியல...

அவர் சொல்
ஆணி போல்
இறங்கியது....

எனக்கு விவசாயம்
தவிர
வேற ஒன்னும் தெரியாதப்பா...

நான் வேண்ணா
சொல்றன் பாருங்க...
நாளைக்கு
சோத்துக்கு கிடந்து
அழியத்தான் போறோம்...

விவசாயம் செத்து
ரொம்ப நாளாச்சுப்பா....

சிரித்துவிட்டு
மறுபடியும்
மறுபடியும்
அவர் மெல்ல
மண்ணை வெட்டிய
ஒலி
என் இதயத்தில்
ஒலிக்க....

படிப்பும், பதவியும்,
செல்வமும், செழிப்பும்
சரிதான்....

மண்ணில்
கால் வைக்க
ஆளில்லாமல் போனா....

என் கிராமம்
எப்படித் தொலைந்ததென்று...

எனக்குள்
தேடத் தொடங்கினேன்....
யாராவது
கண்டால்
சொல்லுங்களேன்.....

.... முகில்

Monday, May 6, 2013

பெண் என்ற கோட்பாடு...


மத்தியான வெய்யிலில்

மண்டை சுட்டு
நிழலுக்கு ஒதுங்கிய
வீட்டு வாசல்.

எப்படி இருக்கிறாய்

என்ற குரலில்
பெண்மை குறைந்த
கரகரப்பு..

திரும்பிப் பார்த்த

அனிச்சையின் முன்
சுமார் ஐம்பது வயதில்
எப்போதோ பார்த்த
செயா...

ஞாபகமிருக்கா என்றாள்...

இல்லாமலா?
என்ன அப்படி ஓர் கேள்வி
என்று நான் கேட்டாலும்

தலை வாராமல்

தற்காலம் தேடும்
தங்க மினுமினுப்புகள் இல்லாமல்
ஒரு தாலிக்கயிறும்
இல்லாமல்
நின்றவள்
செயா போல் இல்லைதான்.

இருபது வருடங்களுக்கு முன்

இலங்கை வாழ்
உலகநாதனின் மனைவியானவள்...
ஒன்றன் பின் ஒன்றாய்
மூன்று பிள்ளைகளுக்குத்
தாயானவள்
என்ற ஓர்மை எனக்குள்

அவள்

என் தோழியாய்,
என் கிராமத்து வீதிகளில்
விளையாண்டு திரிந்த காலமும்
சிரித்து மகிழ்ந்த காலமுமாய்
என நினைவில் வாழ்ந்தவள்...

தூரம் பறந்து விட்ட

என் உலகம்
வேறான பின்
வேரின் உறவுகள்
மனதின் காணமுடியா
மூலைகளில்
மறைந்த இயற்கையானது.

செயாவின் தோற்றம்

என்னை
செப்பனிட்ட நிகழ்காலம்

 மானசீக ஒப்பந்தங்களை

விதியின் வேட்டையில்
பறிகொடுத்து விட்டவளாய்
கணவன் மறைந்தான்.
பெற்ற மகன்களில்
ஒருவன்
நோய்க்குப் பலி.
இன்னொருவன் இருந்தும்
மறந்தான்.

உற்றவனும் செல்ல

உயிர்மகவும் தள்ள
அவளிடம்
ஒட்டிக் கொண்ட
வாழ்க்கை மட்டும்
வெட்கப் படாமல் கேட்டது.

ஏதாவது காசிருக்குமா?

மெல்லக் கேட்டவளின்
கைகளில்
நான் கொடுத்த
நூறு ரூவா
நான்கு நாட்களாகும்.

எஞ்சி நின்றதெல்லாம்

எதிர்கொண்ட வாழ்வும்
ஏக்கங்களும்தான்.
என்று சொல்லாமல் சொன்ன
செயா

எத்தனனயோ

தமிழ்ப்பெண்களின்
உடன் பிறவா சகோதரி.

வேகமாய் வளர்ந்து விட்ட

விஞ்ஞானம்.

21-ஆம் நூற்றாண்டு நாகரிகம்.


விதவையானவள்

இவள் மட்டும்
இன்னும்
யாரோ இட்ட
வரம்புகளில்
தன் வாழ்வுடன்
வதம் செய்கிறாள்.

உலகம் மாறிவிட்டது

என்ற
மேடை முழக்கங்களுக்கிடையே
இன்னும்
செயா போன்ற
கோட்பாடுகள்...

--முகில்