Saturday, November 13, 2010

என் தோழியின் புத்தகம்!

ஒரு வானவில் போல்
தெரிந்த கண்களில்
ஒட்டியிருந்ததன...
சோகங்களின்
நிற வளைவுகள்...

பாரங்கள் சுமந்த
மெல்லிதயம்
சொல்ல முயன்ற
அமைதி வார்த்தைகளில்
 அந்தரங்கம் அரங்கேறியது

வாழ்க்கையின்
விசுவரூபம்
ஒரு பிம்பம் போல்
கண்ணீரில் வழுக்கியது

உணர்வுகளை
எண்ணிப் பார்க்க
கணக்காளன் இல்லாத
இந்தக் கடையில்
இரவுநேரப் பணிக்கு
ஆட்கள் தேவை என்று
ஒரு வாசகம்...
பார்வையில் பரிமாறப்பட்டது.

கைமாறும் காகிதங்களில்
காந்தி.
எமது தேசத்தின் அன்பு
ஒளிவுகளிலும்
ஒழியாமல்....

ஒரு வாழ்க்கையின்
வரைபடமாய்
கலாச்சாரம்
இரவில் கரைந்தது.

தெரியாத உறவுகளில்
அறியாமல் அடைந்த
திண்ணைகளில்
ஒரு புறம்
காமம் எழுதிய கதை
மறு புறம்
கனவுகள் தொலைந்த சிதை

மோகமும் சோகமும்
மோதிய விநாடிகளில்
சில சிதறல்களாய்
வாழ்க்கை ஓடிய
வளைவுகளில்
நாளையின் விடிவு.

நிதர்சனத்தின் நிழலில்
அவள் சபை....

நியாயம் அநியாயம்
சமத்துவமாக...
இந்தத் தோழியின்
திவ்யதரிசனத்தில்
சில இதயங்கள் வாழ....

திரை மறைவில்
எழுதிய மறையாய்...
இவள்....

இவளைப் படிக்க வரும்
இரவும் பகலும்....
இந்த வாழ்க்கையின்
இறையருளாய்...

என் விபச்சாரத் தோழியின்
ஏக்கங்களில்
ஒரு சமுகத்தின்
தொடர்கதை.
பெயரில்லா
இந்தப் புத்தகம்....

எல்லாம் வாழ்வின்
அத்தியாயங்களே!

Thursday, October 21, 2010

கோட்பாடு...

இரவின் நீண்ட தூரம் போல்
என்னைத் தேடிய பயணம்...

இதயத்தில் சுவர்களில்லா
பரிதவிப்பு....

என்னை மூடிக் கொள்ள
இருளே சுவரானது...

சொல்லாத வார்த்தைகள்
இருளில் எழுதிய சுவடியாய்
பெயரில்லாமல்
மறையும் மறையானது...

இருளைத் திறந்து
பார்க்கும் விழிகள்
இறைவனுக்கு உண்டு

இறைவனைப் பார்க்கும்
விழிகள் இருளில் உண்டு!

பாதையில்லாமல்
செல்லும் பயணத்தில்
ஒலித்த வேதம் போல்

என் சிதிலங்களில்
என்னுள்
என்
எண்ணக் கோட்பாடு

என் இருளறையில்
இறையருள்....

என் மந்திரங்கள்
என்னோடு!

இதுவே
என் கோயில்
கோட்பாடு...

Wednesday, October 13, 2010

கண் விழித்து ஒரு தவம்...

ஒவ்வொரு வாழ்வும்
ஒரு தவம்....

இதயம் என்ற
சிறு பேழையில்
இடுக்குகள் இல்லாத
சாலைகளில்
மோதித் திரளும்
எண்ணங்களின்
மூர்ச்சைகளில்
உள்ளும் வெளியும்
நடத்தும் ஒரு தவம்...

என்னைக் கேளாமல்
எங்கெங்கோ
பவணி செல்லும்...
எண்ணத்தின் இறக்கைகளில்
என் இதயம்!

ஒரு நொடி அன்பு,
ஒரு நொடி பண்பு
ஒரு நொடி சினம்
ஒரு நொடி கவலை
ஒரு நொடி சிரிப்பு
ஒரு நொடி மகிழ்ச்சி
மறு நொடி விரக்தி
என அன்றாடம்...
பல அவதாரங்கள்....

என் சுதந்திரத்தின்
சுய ரூபங்களில்
முகமூடி அணிந்து
யாருமறியா
துவாரங்களின்
வழியே
ஒழுகிக் கொண்டிருக்கும்
மணித்துளிகளின்
தசாவதாரங்கள்

அர்த்தங்கள் புரிந்தும்
அர்த்தங்கள் தேடியலையும்
அர்த்தமில்லாத உருக்களில்
என் வாழ்க்கையும்
உன் வாழ்க்கையுமே
அன்றாடம்
கண் விழித்துச்
செய்யும்
ஒரு தவம்....

Friday, October 8, 2010

வானம்

என் இமைகளுக்குள்
கண்ட வானம்
எனதருகே....

எனைச்சுற்றி
ஒரு சோலை,
என் வானில்
சில பறவைகள்...
சுற்றிச் சுற்றி

நான்
ஒரு பூமியா?
இல்லை வானமா?

என் நினவுகள்
எனையறியாமல்
ஜாலம் செய்ய

விளைவுகளாய்
விண்மீன்கள்

விதிகளில்லாமல்
விஸ்தாரமாய்

மூடிய வானமாய்
வெளிச்சம் தேடி....
செய்த தவம்

என் வாழ்க்கையின்
சுவர்களில்...

என்னையறியாமல்
விளம்பரம் செய்திருந்தது

என் வானம் எங்கே?
என்று....

கண்ணுக்கெட்டிய
தூரம் வரை
என் இமைகள்...
என்னை மறைத்தது...
என்னை மறித்தது!

Sunday, October 3, 2010

வாசகன்...

ஒரு புத்தகம்...

வாசிக்க முயன்றேன்
அர்த்தம் புரியவில்லை

யாரோ எழுதிய எழுத்துக்கள்
என்று விட்டுவிட
முடியவில்லை

முகவுரை
பொருளுரை
முடிவுரை
இல்லாமல்...

இந்தப் புத்தகம்....
இன்னும் திறந்திருக்க

முயன்ற பொழுதுகளில்
பதித்த முத்திரை
கிழிந்த பக்கங்களாய்...

இரவும் பகலும்
தெரியாத எழுத்துக்களில்

ஒன்றும் புரியாமல்....

என் புத்தகம்...
நானே வாசகன்!

Tuesday, September 7, 2010

உறவு...

ஒரு நொடி
இருந்து
மறு நொடி
மறக்கும்
ஒரு பொம்மலாட்டம்!

ஒரு நூலிழையின்
மீதாடும்
உணர்வுகளின் பாரம்.

கனவுப் பாலங்களின்
காலற்ற தோற்றம்...

அன்பை யாசிக்கும்
மனதின் வாட்டம்...

அறியாமல் செல்வது
போல் செல்லும்
அறியாமை வாட்டும்...

எதிர்பார்க்கும் வட்டத்தின்
இடையினில் தோற்றம்

சொல்லாமல் சுயத்தின்
சாயங்கள் மாற்றம்...

புரியாத புதிர் போல்
வாழ்க்கை ஓட்டம்

புரிகின்ற தருணத்தில்
அந்திமம் காட்டும்


எதிரே தெரியும்
சிவப்பு விளக்கின்
அடையாளம் போல்

வாழ்வின் வழியினில்
சோகங்கள் சுமந்த
இதயம்
பெறும் பிரியாவிடையாய்...

உறவென்றிருந்த
உயிரின் பயணம்
எனக்குள் முடிந்ததா?

அடுத்த காட்சிக்கு

அனுமதி பெற்றதா?

உறவு எதுவரை?
உறவு யாருடன்?
உறவு என்ன?

Wednesday, August 25, 2010

பிரிவோபசாரம்...

பயணம்...

திடிரென ஏற்பட்ட
பொழுது போல்...

அறியாமல் வந்தமர்ந்த
சக பயணியின்
அனுமானங்களில்

அனுமதிச்சீட்டு
பெறாமல்
அங்குலங்கள் நகர எத்தனிக்கும்
அடையாளங்கள்

உயிரின் உரசல்கள்
உள்ளத்தின் அறியாமை
சித்திரங்கள் தீட்டிய
சில மௌனத் தூரிகைகள்

சிறகை விரிக்க முயன்ற
சிறு பறவை போல்
எனது வாழ்வின் அத்தியாயம்
கனவில் எழுதப்பட்டது...

நேர்கோடுகள்
நேர்கோடுகளால்
வளைந்தன...

பயணத்தின் பாதை
ஏதோ ஒரு இணைவில்
யதார்த்தம் என்ற
பூச்சில்
வழுக்கியது.

என்னைப் பிரிந்தேன்.

ஒவ்வொரு பிரிவிலும்
உள்ள அர்த்தங்களின்
உரையாடலில்

சொல்லாத உணர்வுகளும்
எழுதாத எழுத்துக்களும்
ஊமை மொழியாய்

அந்தரங்க விசும்பல்களுடன்
என்
பிரிவோபசாரம்....

என்னை நான் பிரிந்தேன்
கேட்காத செவிகளுடன்
பேசாத வாயுடன்
மௌனத்தில் தொடங்கி
மௌனத்தில் முடிந்தேன்....

Saturday, August 7, 2010

சொல்லாமல்...

மௌனம் மன்றாடியது.

இதயத்தின்
சிறு வானத்தில்
ஊமைப் பறவையின்
உணர்வுகள் போல்

சொல்ல விரும்பிய
சுகங்களா?
சொல்ல வராத
சோகங்களா?

மனதின் அறையில்
மோதிய எதிரொலிகள்

வறண்ட பூமியில்
வராத மழையின்
ஊழிக் காற்றும்
மின்னலும் இடியும்
எங்கோ கேட்கும்
சப்தம் போல்...

வானம் பார்த்தேன்...

என் இதயத்திற்குள்
எனக்குத் தெரியாத
எல்லைகளா?

ஏக்கத்தின் மைற்கற்களைக்
கடந்த தூரங்கள்...

மனதின் சாலைகளில்
வருவதும் போவதுமாய்

எங்கு தொடங்கினேன்

எங்கு முடியும் என்று
சொல்லாமல்....

Sunday, August 1, 2010

புதிர்கள்


அறிவு ...
எல்லாம் எனக்குத்
தெரியும் என்றாலும்
ஏதோ தெரியாமல்
ஏதோ புரியாமல்
ஏங்கும் இதயங்கள்
இல்லாமல் இல்லை...

கற்பனைகள் வாழ்வில்
நிஜங்கள் போல்
கனவுலக வாழ்க்கை
இல்லாமல் இல்லை

உள்ளொன்று இருந்தும்
வெளியொன்று காட்டும்
முகங்கள் உலகில்
இல்லாமல் இல்லை

ஆசைகள் துறந்தோம்
அறிவினைத் திறந்தோம்
ஞானியர் ஆயினும்
ஏதோ ஆர்வம்
இல்லாமல் இல்லை

நேயங்கள் செய்வோம்
நியாயங்கள் செய்வோம்
என்று சொல்லி
வேஷங்கள் செய்யும் நாம்
இல்லாமல் இல்லை

அன்பினால் இனைந்தோம்
அன்பிலே விளைந்தோம்
காதலில் முனைந்தோம்...
ஆயினும் பிணக்கங்கள்
இல்லாமல் இல்லை

கனவுகள் கொண்டோம்
காட்சிகள் கண்டோம்
இயல்பிலே மாற்றங்கள்
இயையா ஏமாற்றங்கள்
எல்லோர் வாழ்விலும்
இல்லாமல் இல்லை...

நேற்றொரு தோற்றம்
இன்றொரு தோற்றம்
ஏனிந்த மாற்றம்
சொல்ல இயலாத நிலைகள்
இல்லாமல் இல்லை

சமத்துவம் சொல்வோம்
சமநிலை சொல்வோம்
ஆயினும் பேதங்கள்
இல்லாமல் இல்லை.

கடவுளின் பெயரில்
கருமங்கள் ஆயிரம்
கடவுளின் பெயரால்
சுயநலச் சிறுமைகள்
காண்பவர் உலகில்
இல்லாமல் இல்லை...

கடவுளம் என்ற
கடைச்சிறு உண்மை
கடவுளே என்பதை
கற்றவர் கூட
திடவுளம் இழப்பது
இல்லாமல் இல்லை...

எதனால் விருப்பம்
எதனால் வெறுப்பு
எதற்கு வாழ்க்கை
எத்தனை கல்வி
தத்துவம் வாழ்வில்
இல்லாமல் இல்லை

மனிதனின் மனம்
மனிதனின் குணம்
தேவைகள் மீறிச்
சேமிக்கும் தனம்
தனக்கென வேண்டும்
தாகமும் சுகமும்
பருகுதல் பெருகுதல்
இல்லாமல் இல்லை...

ஏதோ தெரியாமல்
ஏதோ புரியாமல்
ஏங்கும் இதயங்கள்
இல்லாமல் இல்லை...

புதிர்கள் போல்
ஆசைகள் நெஞ்சில்
விதைக்காப் புதர்களின்
வேக வளர்ச்சி போல்
வாழ்க்கை முழுவதும்
இல்லாமல் இல்லை!

Sunday, July 25, 2010

நிஜம் என்ற நடிப்பு...


நிகழ்வு!

வேண்டியபடி இருக்கும்
தருணம்.

மகிழ்வு.....

மனித மனம்...
மனநிலைகள்...
மறுபடி மறுபடி
தன் சுகம்...

எண்ணங்கள்
நிறைவேறாத
எதிர்மறை

எதிரி போல்...
ஒரு உண்மை
உதாசீனப் படுத்தப்படும்.

இது என் இயல்பு
என்ற உண்மை

மனம் உணரும்.
மனநிலை உணராத
ஒரு
அந்தரச் சுகத்தின்
அகராதி போல்

நான்...
நிஜம்...
நடிப்பு....
இயக்கம்...
இந்த வாழ்வு!

ஒரு முறை
உண்மை பேசு!

உண்மையை
உணர்ந்து....
உன்னையும்
உணர்ந்து!

நிஜம் என்பது நடிப்புதான்....
வாழ்க்கை என்பது நடப்புதான்!

Friday, July 16, 2010

முனிவன்!


விழியின் சாளரங்கள்
திறந்தாய்...

உன் பார்வையில்
நான் வீழ்ந்தேன்!

உன்னையறியாமல்
ஒரு பிம்பமாய்
உன் விழித்திரையில்!

நீ
இமை மூடிய
பொழுதுகளில்
என்னைச் சிறையிட்டாய்

இமைச் சிறகுகளால்
வீசி
வசியம் செய்தாய்

என் கவிதையின்
எழுத்துக்களாய்
எனக்குள்
எழுதிய
என் காதல் புத்தகத்தின்
அத்தியாயங்கள்
உன் முகவுரையே....

படித்து முடிக்காத
பக்கங்களாய்
என்னுள்

ஒவ்வொரு வினாடியும்
இதயத்தில்
பிரசவித்தாய்

நான் முதன்முறை
முக்காலமும்
உணர்ந்தேன்!

ஒரு காதல் முனிவனாய்....


-முகில்

(பட உதவி: BostonHerald)

Wednesday, July 14, 2010

ஞாபகம் மறந்த போது....

நடக்கும் பருவம்
வந்த பின்னும்,
ஒரு
சிறு
தவழும் இயந்திரப் பொம்மை கண்டு
அழுத ஞாபகம்....

அம்மாவைப் பிரிந்து
பள்ளி சென்று
'அ'னா எழுதிட
அழுத ஞாபகம்....

சிறு குடும்பத்தின்
சிறகுகளாய்...
கூடப் பிறந்த
அண்ணன்களைக் காண
ஆசை ஆசையாய்
துடித்த ஞாபகம்.

அம்மாவின் கதைகள்
கோயில் புளியோதரை
நண்பர்களுடன் பம்பரம்
நையாண்டி,
நமட்டுத்தனக் குத்தகை ஞாபகம்....

பள்ளியில் புத்தகத் திருட்டு
படமில்லாத புத்தகம் வெறுப்பு
ஆங்கிலம் என்றாலே
அழாத குறையாய்
காதினில்
விழாத ஞாபகம்...

இரவினில் ஏனோ
நிலவுக்குப் பயந்து
நிலவை மறைக்க
குடை பிடித்த ஞாபகம்.

ராஜா செருப்பு போல்
வளைந்த காலணி
அணிந்து நடித்த
நாடகம் ஞாபகம்...

அதே உடையில்
அறியாத கம்பீரம்
அழகென்று எண்ணி
ஊர்வலம் வந்து
ஊரார் பார்த்திட
அலைந்து சுற்றிய
நாட்கள் ஞாபகம்.

ஆட்டமும் ஓட்டமும்,
ஆங்காங்கே திரிந்ததும்,
நாட்கள் ஓடியும்
நண்பர்கள் மட்டும்
நினைவினில்
நிறைந்த ஞாபகம்....

பள்ளியில் கல்லாத
கல்வியின் ஆழம்
அம்மா சொன்ன
கதைகளில் வாழ்ந்து
இதயத்தில்
ஆயிரம் பாடங்கள்
கற்பித்த ஞாபகம்.

அன்பும் பண்பும்
சில நல்லவர்
பேசிய பேச்சில்
செய்த செயலில்
கற்ற ஞாபகம்...

வளர்ந்த காலங்கள்
வாலிபப் பருவத்தில்
காதலின் அறிமுகம்
கண்களின் சக்தியை
கண்ட ஞாபகம்.

அதுவரை கொண்ட
ஏக்கங்கள் யாவினும்
காதலின் ஏக்கம்....
முதன்முதல் நானே
ரசித்த உணர்வாய்...

கவிதையாய் பிறந்த
உயிரின் ஊற்றாய்
கனவின் லயிப்பில்
கண்ட உலகாய்
காதல் ஞாபகம்.

காதலும் யதார்த்தமும்
நடத்திய போரில்
வீழ்ச்சியா வெற்றியா
என்றறியாமல்
எல்லாம் முரணாய்
வாழ்வின் பாதைகள்
பிரிந்த ஞாபகம்...

வாழ்வின் ஆயிரம்
பரிமாணங்கள்...
யாவும்
ஒன்றாய் பரிமளிக்கும்
இல்லற வாயிலை
மணையாள் கைகளில்
தொட்ட ஞாபகம்....

உறவுகள் என்று
இருந்தவை யாவும்
ஒவ்வொன்றாய்ப்
பலம் இழந்த ஞாபகம்.

அன்பின் ஆழம்
அறியா வலியுடன்
வரையரை வாழ்வின்
வலிகள் ஞாபகம்

சிற்றீசல் பயணத்தின்
நேற்றின்
இனிய நினைவுகள்...
நெஞ்சின் காயம்
ஆறிட இட்ட
மருந்தாய் ஞாபகம்...

ஓடும் சமயம்...
வண்ணம் மாற்றும்
தன்னை மறக்கும்
இதயம் ஞாபகம்...

போகப் போக
மாறும் மாற்றங்கள்..
என்னைத் தேடி
நாளும் ஓட்டங்கள்....

போகும் வழியோ
வரும் வழியோ
எங்கோ
என்னை மறந்த ஞாபகம்

முகில்

Saturday, July 10, 2010

மரம்....


அழகாய்,
பசுமை பூக்க
உயர்ந்திருந்த
மரத்தின் அன்பு

கேட்காமல் கொடுத்த
நிழல்.
காற்று.
அழகு....

அதன் பூக்கள்
வீழ்ந்த
அழகு நிழலில்
அமர்ந்த
என் காதுகளில்...
அது
தனக்குள் அழுத குரல்...

அழுகையின் வேதனை
என் மனம் பிழிய,
கேட்ட காரணத்திற்கு
மரமளித்த பதில்...

என் மனம்
என் கண்கள்
என் கண்ணீர்...

அறிவதால்
உன்னால்
உதவ இயலாது என்றது...

சொல்வதால்
உன் பாரம்
குறையலாமே என்றேன்.

சில மொழிகள்
சொல்வதல்ல என்றது.

அனுபவத்தின்
கேள்விகள்
தானே விடைகளாகும்
என்றது....

நான் பாரம்
வேண்டித்தான்
அழுகிறேன்..

என் பூக்கள்
காய்க்காமல்
வீழ்கின்றன

என் வாழ்க்கை
பலனடையவில்லை

என் குரல்
எனக்கே
கேட்காத போது

உன் காதுகளில்
எப்படி?
என்றது....

அனுபவம் விடையாகும்
என்று சொன்ன
தத்துவமே என்றேன்

என் மனம்
என் செவிகள்
என் உணர்வுகள்

பூக்கள் உதிர்வதால்
வருந்தாதே
புலரும் காலை
பூவாகும்
இன்னோரு நாள்
காயாகும்...
கனியாகும்.

இன்னொரு செடியாய்
இன்னொரு மரமாய்

உன் ஈகை
உலகிற்கு வரமாகும்

என் வார்ததைகள்
எதிரோலிக்க...

வானிலிருந்து
வீழ்ந்த நீர்த்துளி...
மரத்தின் மகிழ்வு
போல்

என் பயணத்திற்கு
வாழ்த்துச் சொல்ல...

கண்கள் திறந்தேன்

ஆம்...
வாழ்க்கை என்ற
கனவினில்
கண்கள் திறந்தேன்!


:) முகில்

Tuesday, July 6, 2010

காகிதக் கப்பல்


கணக்குப் பார்க்காமல்
கழியும்....

மனதின் வினாடிகள்
எங்கெங்கோ திரியும்...

ஆசையும்
எதிர்பார்ப்பும்
ஏணி போட்டு
வானம் தொட முயற்சிக்கும்...

கற்பனைகள்
கனவுகள்
காலத்தின் காலடிகளாய்
சுவடில்லாமல் பறக்கும்

நம் வாழ்வின்
வினாடிகள்
நழுவும் மீன் போல்

இமைகளின் அமைதியில்
விழிக்கும் வரை
இறந்தகாலமாய்...

நாளை வரும் வரை
நாம் எங்கிருப்போம்?

இன்றின் நிழல்
அமைதியிழந்து
எங்கு ஓடுகிறது?

வாழ்வின் பரிமாணம்...
ஒரு வாளித் தண்ணீரில்
மறுபடி மறுபடி
சுற்றும்,
நிற்கும்.
மக்கிப் போய்....
உருக்குலையும்
காகிதக் கப்பல் போல்....


:- முகில்

Saturday, June 26, 2010

வேண்டுகோள்....


உண்மை சொல்ல
முயன்ற தருணங்கள்....
வார்த்தைகள் வரவில்லை

பொய்கள் சொன்னேன்,
உண்மையாயின...

என் மனதினுள்
நானே கேள்வியானேன்...

நீ எப்படி பதிலானாய்?

சொல்ல விரும்பிய
உணர்வின்
தவம்....

வரமளிக்க நீ....

ஒரு வாஞ்சைப்
போராட்டம்.

நானும் ஒரு
காதல் போராளி போல்...

காதல்
என்
பிறப்புரிமை என்று

கவிதைகளாய்,
கட்டுரைகளாய்,
கடிதங்களாய்...

என் கனவில்...

விடியலின் அடிமையாய்
வாழ்வின் வலிகளில்
காந்தியானேன்.

அஹிம்சையின்
ஹிம்சையில்
என் அவதாரம்....

என்னை மறுபடி
உறங்க விடுங்கள்
என் கல்லறையில்

காதலி இல்லாத
காதலன் என்று
பெயரிடுங்கள்

தோற்றம் மறைவு
மட்டும் எழுத வேண்டாம்...

நான் வாழ்வேன்...

எப்போதும்
என் கனவில்.....

என் வேண்டுகோள் மணு
புரிகிறதா?

Tuesday, June 22, 2010

பித்தனா? புத்தனா?

உறைந்து போன
சமயத்தின் சமாதானம் போல்
ஒரு
நொடியின் சனனம்....

என் எதிர்கால முன்னுரையாய்...
எதுவரை போகும் என்று
தெரியாத பாதையாய்
விரிந்த விதியின்
புரியாத வீதியாய்,

யாரோ இட்ட பிச்சையில்
என் முறுவல்கள்
என் அழுகைகள்
என் தேடல்கள்
என் தொலைவுகள்

வாழ்க்கை என்ற
விளையாட்டின்
நடுவரில்லா
தீர்மானங்கள்!

தொடக்கங்களின்
முடிவாய்
முடிவின்
தொடக்கங்களாய்....

ஜெயித்ததும்
தோற்றதும்
ஒரு பரிமாற்றம் போல்

நான்
அமைதியாய்

ஒரு அசைவற்ற
சடலமாய்....

அகங்காரம்
என்ற புள்ளியை
அறிய மேற்கொண்ட
அறியாமைப் பயணத்தின்

அடிச்சுவடுகளில்...
நான்....
யார் செய்த வியாபாரம்?

என் கேள்வியின்
இத்யாதிகள்
புரியாத செவிகள்....

ஒரு புறம் பித்தனாய்
மறுபுறம் புத்தனாய்...

Friday, June 4, 2010

நீ...நான்...எனும் உலகம்!

தென்றலின் தீண்டலாய்
தீயின் தனலாய்,
இதயப் பட்டறையில்
இழகிய உணர்வாய்....

ஏதேதோ வரைந்தும்
தெரியாத சித்திரமாய்
மௌனக் கடலின்
மோதிய நீரலைகளாய்...

அணாதையாய்த் தெரிந்த
ஆகாய விரிவில்
திசைகள் இல்லாத
அந்தரத் தேடலாய்

சொல்லாமல் புரியும்
சுதந்திர வார்த்தைகளாய்
நில்லாமல் ஓடும்
நீரின் சிரிப்பாய்

என்னில் இருக்கும்
என்னில் இயங்கும்
இரவும் பகலும்
எனக்காய்த் துடிக்கும்
இதயம் போலே....

என்னை இயக்கும்
என்னில் கலக்கும்
எனக் கென்றிருக்கும்
மூச்சைப் போலே

இந்த
உயிரின் ஒப்பந்தம்
உனது பந்தமா?

தெரியாத பொழுதுகளின்
துகிலுரிப்பில்
திறந்த மேனியாய்...

என்னில் வாழும்
நினைவுகளின்
யதார்த்தம்

என்னை மீறி
எல்லைகளில்லாமல்
எல்லாம் சூழும்
கற்பனை உலகம்....

உனது சுவடுகளில்
உன்னைத் தேடுகிறேன்.

சுற்றிச் சுற்றி
தொடரும் தேடலில்...
இலக்குகள் சுழன்ற போது
எனது சுவடுகளாய்....
என்னைத் தொடர்ந்தாய்!

என்னை ஸ்பரிசித்த
உனது
சுவாசத்தின் தொடர்பில்....

நான் சஞ்சரித்த
ஒரு
புண்ணிய யாத்திரையின்
சமிக்ஞையாய்

ஒருமுறை வாழக் கிடைத்த
இந்த சமயத்தை
உனக்கே சமர்ப்பணம் செய்கிறேன்!

உன்னால் உருவான
இவ்வுலகம்....

அதன் முகவரியாய்...
நீ....நான்....
ஒரு மெல்லிய சிரிப்பாய்...
வாழ்ந்துவிட்ட நிம்மதி
எனும் உணர்வு!
photo courtesy: widget.bigoo.ws

Sunday, May 30, 2010

அன்றாடம்....

வசந்தம்
வந்தது போல்
ஒரு உணர்வு...

உள்ளம்
கதவைத்
திறந்து வைத்திருந்தது.

உயிர்
ஊசலாடியது!

என்னை
அறியாமல்
நான்
என்னையே ரசித்தேன்.

உன்னை
யோசித்தேன்.

நொடிகளை
யாசித்தேன்.....

சில ஞாபகங்களை
இதயம் தாங்காது
என,

ஒரு
நிசப்தமான
பரிசானாய்!

நீங்காத
தூரங்களில்
நெருங்காத நிழல் போல்

என் நினைவுகளில்
பூத்த
உனக்கு

ஒரு வறண்ட பூமியின்
வானம் பார்த்த
தவமாய்,
வசந்தமானாய்....

இமை திறந்த
கணத்தில்
கண்ணீர்
விட்ட கண்களில்

காணல்....
கானல் போல்

வசந்தம்
எங்கோ மலர்ந்தது.....

அன்றாடம்
ஒரு வரம்

என் மூடிய இமைகளுக்குள்!

Friday, May 21, 2010

தூரங்கள் அருகினில்


ஒரு முறையாகிலும்
உனக்கு நன்றி நவிலல் வேண்டும்.

முயன்ற தருணங்களில்...
என் ஊமை உதடுகளின்
துடிப்பில் வெளிவராத
சங்கீதமாய்,
நடை பயின்ற வார்த்தைகள்...

மனதின் சுயநலங்கள்
மனதிடம் பேசிய கதைகளின்
மறுபுறம்
ஒரு சுகமாய்
உன் உருவம் சுமந்த
நினைவுக் காகிதங்கள்...

எண்ணமும் செயலும்
எதிர் துருவங்கள் போல்
என்றும் இணையாமல்
செல்லும்,
நாட்களின் சுமைகள்...
உன்னை கண்ட பின்
அடிமை போல்
கை கோர்த்துக் கொண்டன!

ஒன்றைப் பிடிக்க
ஒன்று ஓடும்
காலம் போன
கவிதைப் பரிதவிப்பில்

நீ
நான்
ஒரு கற்பனை...

நிம்மதியின் சாயல்
வெட்கம் கொண்டது.

அதன் முகத்திரை
அகற்றி
கொடுத்த முத்தத்தில்
இழந்த நொடிகளில்...

என்னைக் காணாத
தூரங்கள் எல்லாம்
இப்போது
அருகினில்....

Sunday, May 9, 2010

முகம்

நேசம் இணைய
இரு உள்ளங்கள்
உருவாக்கும்
உயிரெழுத்தின்
முதல் வரியாய்

ஒரு காலகட்டத்தின்
முகவரியாய்....

பிறந்த அழுகையொலி
பல உள்ளங்களின்
சிரிப்பின் அர்த்தமாய்

முகம்!

பரந்து கிடக்கும் பூகோளத்தில்
பலகோடி உயிர்களின்
தனித்துவமாய்....

மனக் கண்ணாடியின்
ஒவியமாய்

எத்தனையோ உணர்வுகளின்
எழுத்துப் பிரதி போல்
தெரியாத உறவுகளின்
பாலமாய்...

முகம் பார்க்க
வரும் சுகம்
உள்ளங்கள் ஏங்கும்.

நட்பாய்,
காதலாய்
அன்பாய்
உறவாய்....
நேற்றைய
இன்றைய
இருப்பின் அடையாளங்களாய்...

முகத்தின் பிம்பங்கள்
உயிரின் சுவடுகளாய்
காதலில் பிறந்து
வாழ்வைத் தொடரும்.

காதலைத் தூண்டும்
உள்ளத்தில் முகமே
கனவினைத் தூண்டும்.

கற்பனை செழிக்க
விருப்பத்தின் முகம்,
பாசத்தின் முகம்,
அன்பின் முகம் என,
வானாய்,
நிலவாய்
சூரியனாய்
நட்சத்திரமாய்
பூக்களாய்
மழையாய்
அலையாய்
முகிலாய்
காற்றாய்
காணுமிடமெல்லாம்
கண்களில் வரும்
உருவகம் ஒரு முகம்.

ஊடல் கொண்டு
மறைந்து நின்றாலும்
உள்ளத்தின் பின்புறம்
ஒளிந்து நிற்கும்
மறையா உருவிலும்
ஒரு முகம்.

அறிமுகம் இல்லாத
இதயப் பரிதவிப்பில்
ஆர்வம் காட்டும்
ஒரு அன்பின் முகம்...
வாழ்க்கையின் வழிதனில்
சோதனை தந்து
வேதனை கொண்டு
பார்க்க விரும்பா
சாபமும் பெறும்
ஒரு முகம்...

முகத்தின் அகம்
அகத்தின் முகம்
இரண்டும் தகும்
முகம் தேடி
சகத்தின் முகமும்
முகத்தில் சகமும்
செல்லுதடி பெண்ணே...

முகம் வெல்லுதடி கண்ணே!
அகம் வெல்லுமோடி கண்ணே?

Tuesday, April 13, 2010

ஓவியம்...

மௌனத்தின் சப்தங்களைக்
மென்மையாய் ரசித்த
உச்சகட்டங்களாய்...

உன் பெருமூச்சின்
ராகங்கள்

எனக்கு மட்டுமே
தெரிந்த
இதயத்தின் பரிபாஷை!

எல்லாம் எனதென்று
எண்ணிய பொழுதுகள்

என்னைக் கேளாமல்
கண்கள் விட்டன
கண்ணீர்த் துளிகள்....

முகம் மறைத்து
அமைதியாய் இதயம்
விசும்பிய வலிகள்
என்னை
அறிமுகம் செய்ய
முயன்ற கணங்களில்

அங்கும் இங்குமாய்
சிதறினேன்.....

என்னையறியாமல்
விழுந்த
என்
கண்ணீர் துளிகள்
உன்னை வரைந்தன....

விடியாத வானத்தில்
எழுந்த விண்மீனாய்
எனக்குள் தெரிகிறாய்...

சுவர்களில்லாமல்
உன்னை வரைந்த
சுகம்....

அழுகையில்
இவ்வளவு சுகமா?

அடிக்கடி
இதயம் வேண்டும்....


எனக்காக
இன்னும் ஒரு முறை
அழுது கொள்ள
அனுமதிப்பாயா?

Friday, April 9, 2010

நிந்தனை ஏனடி சக்தி?

புதிய தொரு உலகம் செய்வோம்
புதுமை களித் தினிமை செய்வோம்
பொலிவு மிகு சொல் நிறைவாய்
பொழிந்த சொற் களிப் பினிலே
விழி திறந்து முறங்கு கின்ற
வீன ராகி னோமோ நாம்?

வைய மெங்கும் மானிட ராய்
வாய்த்த தொரு பிறப் பினிலே
வாழு கின்ற பொழு திதிலே
வறுமை கொல்லு மொரு பக்கம்
வதம் பலவும் வகை வகையாய்
வஞ்சம் கொல்லும் ஒரு பக்கம்

மத மதுவும் மருள் சேர்க்கும்
மடமை மிகு அர சியலும்
மதி இழந்து மாசு கொண்டு
மூச்சு போலும் போதை யுற்று
மூர்க்கர் போலே சாதி வெறி
மூழ்க வைக்கும் சாக் கடலாய்
மனித வாழ்வின் நாற் றங்கள்
மலிந்து வரும் தாக் கங்கள்...

கற்க கசடற என்ற மொழி
கற்றவை நிற்க என்ற வழி
செல்ல மனம் சிந்தனை இன்
சீர்மையுறு பக்தியில் செறித்த வழி;
இவை தருமே உள்ள ஒளி
இது வறியாப் பொல் லாங்கில்
இருள் கவிழ்ந்த நிலை யிங்கே...

நிந்தனை ஏனடி சக்தி? நீ
தந்து பிறந்த மனித ரிலே
நல்லவர் தீமதிச் சிறி யவர்
என்ற பிரி வினை நினதாமோ?
வெந்திடும் யாக்கை அறிந்த பின்னும்
வேஷங்க ளிடுவதும் நின் அருளாமோ?
வேடிக்கை காண்பதும் சரி யாமோ?

எத்தனை பிரிவினை எமக் குள்ளே!
பஞ்சம் பசி பட்டினி நோயென
பரி தவிக்கும் பாவ சீவிகள்
செல்வம் சேர்த்து ஈயா தவரும்
கொலைகள் புரிந்து கூத் தடிப்பவரும்
இருந்தும் மாய்ந்த நிலயி லுழலும்
மனிதரோ, மனித உருவில் பேயரோ
யாரருள் தாயே உன தாமோ?

அறிவார் ஆயினும் அன்பு செயார்
அக மதில் இல்லா அன்பு
செய லதில் வருதல் சாத்தியமா?
மாற்றம் வேண்டும் தாயே நீ
மாற்றிட வேண்டு முன் புதல்வரை
மனிதம் அறிந்திடல் மகிமை யெனில்
மறுபடி புதுஒரு உலகம் செய்வாய்

இனி செய் யுலகின் பிறப்பாக
என் செய்வாய் ந்நீ சக்தி?
மறந்தும் தவறுகள் புரியாப் பரமே
உனக் கொரு சக்தி கேட்பாயோ?
மதிகெடு மனிதனின் போதை விட்டு
முகத் திரை போட்டுக் கொள்வாயோ
மாற்றம் வேண்டியே புது உலகில்
மரமும் செடியும் வளர்ப் பாயோ?
மனதில் சாந்தம் கொள் வாயோ?

Friday, March 26, 2010

வாழ்க்கை என்றொரு போதிமரம்....











ஊழிக்காற்று வீசிய வேகம்...
உஷ்ணத்தின் உச்சகட்டம்
நெகிழ்ந்து போன சமயம்....
கனவுலகில் விழித்து...
உணர்வுகளின் கட்டைப் பஞ்சாயத்து!

யார்?

யார் நான்?
என்று மனம்
கண்ணாடி பார்த்து
கேட்டது.

பிம்பங்கள் ஒன்றொன்றாய்
வேஷங்கள் காட்ட
மனம் சிரித்தது.

நான் யாரென்றால்
நாலுவிதமாய்த்தான் இருக்கும்...
என்ன சிரிப்பு? எக்காளம்?

மனம் தனக்குள்ளே
முனுமுனுத்தது.

மனதின் மனம்
பிம்பங்களாய்...
பிம்பங்களின் பிதற்றலில்
மனம் மயங்கிக் கிரங்கியது....

என்னைத் தேடிய மனமும்
மனதைத் தேடிய நானும்
பிம்பங்களில்
அனாதைகளாய் பிரிந்த போது

யாரோ இட்ட பிச்சையாய்
நிஜமும் மாயையும்
நிர்வாணமாய்....

வாழ்வு என்ற பெயரில்
பலவந்தமாய்
என்னை ஒருபுறம்
மனதை ஒரு புறம்
பலாத்காரம் செய்தது....

நிமிடங்களை
சுருட்டி கட்டிய போது
மாயங்களின்
கிரகத்தில் பயணித்தேன்...

இணைந்த உடல்களின்
இன்பத்தில் உருவானேன்...
உள்ளங்கள் ஒன்றாக
நானே உயிரானேன்.

உலகிற்கு அறிமுகமாய்
இன்னொரு ஜீவனாய்
ஒருவழிப் பாதையில்
நானும் நடப்பானேன்.

தேவைகள், தேடல்கள்
வயிறும் காமமும்
ஆசைகள் அடைதல்
அன்றும் இன்றும்
வழிவழி மரபுகள்.

நானும் மனமும்
என்று சேர்வோம்?
வேகமும் அயர்வும்
கோபமும் தாபமும்
அடையும் வேட்கையும்
கொலையும் கொள்ளையும்
எல்லாம் எதற்கு?

எங்கோ எப்போதோ
ஏனோ பிரிந்த
மனதும்
நானும்,

கனவுலகின் கதவிடுக்கில்
காற்றாய்ப் பயணித்தோம்.

வாழ்க்கை கனவா என்று
கேட்கவும் விரும்பாமல்
வழிகளில் ஓடும்
விழிகள் இல்லாமல்
பயனித்தோம்.

அனாதைகளாய்

வாழ்க்கை என்னும் போதிமரத்தினடியில்
காணாத நெருக்கங்களில் 
வாடிக்கைப் பிறவிகளாய்....

என்றாவது ஒரு நொடி
என் மனமும் நானும்
இணைவோமா?

Saturday, March 13, 2010

உலகம் ...மனிதம்...


ஆயிரம் ஆயிரம்
ஆண்டுகள் இதுவரை
இறைவனைக் கண்டதுண்டோ?

பல நூறு மதங்கள்
மண்ணில்
இறைவன் பெயரில் நன்றோ?

இயற்கையின் படைப்பில்
உயிர்கள் என்றால்
தெய்வம் இயற்கை ஆகாதோ

சக்தியின் ரூபம் எதிலோ?
சகலமும் படைத்தது எதுவோ?
கேள்விகள் கேட்டு
ஞானம் கற்கும்
கடவுளின் ரூபம் எதுவோ?

மனிதனின் மனம்
மதமெனும் குணம்
மதத்தினில் சிறுத்தது நன்றோ?

உயிர்களின் திறம்
மனித உருவினில்
மடமை கொள்வதும் நன்றோ?

சாதிகள் வைத்தான்
சடங்குகள் வைத்தான் - தோல்
வண்ணப் பிரிவினை
நாதியில் வைத்தான்...
ஆதியில் அம்மணம்
அந்தமும் அம்மணம்
மீதியில் மூழ்கிடும்
மூர்க்கமும் நன்றோ?

மதத்தின் பெயரில்
மனிதனை மனிதன்
மாய்ப்பதும் ஏய்ப்பதும் நன்றோ?

இன்னொன்றைக் கொன்று
ஒன்று வாழும்
இயற்கையின் விதியில்
மிருகம் வாழும்

மிருக மரபிலும்
மிகுந்த கேவலம்
தனது இனத்தை
தானே கொல்லும்
மனித வெறியும் நன்றோ?

அரசியல் கொள்ளையர்
ஆளும் சூழ்ச்சியில்
அறியா பேதை மக்கள்

கற்றும் மறக்கும்
கயவர் போலே
கற்றவருள்ளும் மூடர்...

பட்டினி பசியென
உண்ண உணவிலை
பஞ்சம் கொல்லும்
ஒரு பக்கம்

உண்டது மிஞ்சி
உணவை எறியும்
உலகின்
இன்னொரு பக்கம்

உலகம் முழுதும்
ஒரு குடும்பம்
உலகின் சொத்து
அனைவருக்கும்
என்று பகிர்தல்
மனிதம்....

ஒருவன் தலைமுறை
சிறந்து வாழ
ஒருவன் உழைக்கும்
திறன் நன்று....

தந்தை உழைக்க
தாயும் உழைக்க
மைந்தர் மகிழும்
தண்மை போல்

உலகின் மூலையில்
யார் உழைத்தாலும்
ஏங்கும் இன்னொரு
பட்டினி சகோதரன்
நோயில் சகோதரி
இவர்களுக்கு ஈதல்
இன்பம் சேர்க்கும் மனிதம்.

மதத்தில் திமிரும்
அகங்காரம் நீ...
நீ என்ற உன்னை
மதம் என்ற பண்பை
குறைத்தே மதத்தில்
'னி' சேர்க்க மனிதம்

அகங்காரம் தரும்
சுயநலம் விட்டு
அன்பு நீ சேர்க்கலாம்
மனிதப் பண்பு நீ சேர்க்கலாம்

நாளைய உலகம் அதற்க்கு
நல் மனிதர்கள் வாழும்
மனிதம் என்றே பெயரிடலாம்
உலகம் மனிதம் என்றே மாறிடலாம்..

Friday, March 12, 2010

நான் வானம்...நீ பறவை

என் மௌனத்தின்
உதிரல்களில்
விளைந்த பூக்களாய்
வானம் பார்த்தாய்...

உன் பார்வை
என் வானத்தில்
வானவில்லின்
வண்ணங்கள் தீட்ட ...

நினைவுச் சூரியனின்
புரவிகளாய்
என் தேரிழுத்தாய்

பலகோடிக் கவிதைகளின்
ஸ்பரிசத்தில்
உனை எழுதாத எழுத்தில்லை.
மொழியில்லை!

கண்கள் பாராத
நுண்ணுயிராய்
என் மண்டலத்தில்
முற்றுகை இட்டாய்.

நினைவுகள் அடிமையாய்...
சுவாசத்தில் நீயில்லா
சுகம் பிடிக்காமல்
என் சுதந்திரம்
உன்னில் குடி கொண்டது!

யுகங்கள் ஓடியும்
சகங்கள் மாறியும்
நீ மட்டும்
வாடாத வாசமாய்
வாழ்கிறாய் எப்படி!

என் ஈசல் வாழ்வினில்
உன் வசப் பட்டேன்
என்ற ஒரு நினைவே
சாபல்யங்களாய்

மௌனத்தின் சலனங்களாய்
நீ சிறகடிக்கிறாய்...
என் வானம் உனக்காக
விரிந்து கிடக்கிறது!

Saturday, March 6, 2010

காதல்...


காதல்!

உயிரின் ஸ்வரம் மீட்டி
உணர்வின் இசையாய்

வாழ்க்கை வனத்தின்
வசந்த வனப்பாய்

சொல்லாமல் குடிபுகுந்த
சுயத்தின் சுகமாய்

அன்பாய் அகத்தில்
அறிந்திடும் அழகாய்

இலக்கியம் அறியாமல்

இதயம் எழுதும்
இனிய கவிதையாய்


உன்னால்....
காதல்!

நிழல் கூட வியந்தது 
வெளிச்சம் இல்லையென்றால்
உன்னைத் தொடர முடியாதென்று....
நானோ
இரவு பகல்
வெயில் மழை என்று
உன்னைத்  தொடராத
பொழுதுகளே இல்லை...

காதலின் வெளிச்சத்தில்
உன்னை என்
இதயத்தில் உயிராய் தொடர்கிறேன்...
சூரியன் வாராத  நாளுண்டு
சந்திரன் இல்லாத நாளுண்டு
உன்னை  எண்ணாமல்
நானுண்டோ?
நின் நினைவுகள் நீங்கிய
நொடியுண்டோ?

இச்சென்மம் விழி மூடும்
என் காதல் விழி திறக்கும்
மறைகின்ற நொடிதனிலும்
உன் நினைவில் உயிர் பெறுவேன் 
மறுபடியும் பிறப்பேன்
மறைவின்றி வாழ்வேன்

இப்பிறவி எனக்களித்த
இறைவனது அருள் போலே
காதலுனை எண்ணியே
காற்றினிலே கலப்பேன்....
என் வானின் திசை யாவும்
உன்னோடு பறப்பேன்...

Thursday, March 4, 2010

பயணம்...



யார் சொல்லித் தந்தது
இந்தப் பயணம்...

நியதிகளின் நேர்கோட்டில்
வளையும் பாதைகள்.

வளையாத உள்ளங்களின்
கண்ணாமூச்சி விளையாட்டு...
இமைக்கும் கணம் 
கலையும்  கனவுகள்

நேற்றும் இன்றும்
காற்றாய்க்  கரையும்!
நாளை என்னும்
தெரியா இலக்குகள்...
அறியாப் பாதையில் 
அனாதைப் பயணங்கள்...

பெயர்கள் வைத்து
பேச்சில் மட்டும்....
பாவ புண்ணியப் புதினங்கள்

நெருடும் உணர்வுகளின்
நிழல்களில் உறங்கும்
ஒட்டாத உறவுகள்
ஓடும் வாழ்க்கை

பயணம் தொடங்கி
செல்லும் வேகம்
எல்லாம் ...
முதல் தொடக்கம்
முடிவு அடக்கம்
தோற்றம் மறைவு
என்று,
கல் அறைக் 
கவிதையாய்
ஆத்மாவின் தேடல்....

யார் சொல்லித் தந்தது
இந்தப் பயணம்?

Saturday, February 27, 2010

அவள் நான்!

கதை சொல்லிய வானம்
கற்பனைகளின் கருவறையாய்...
என் எண்ணக் குழந்தைகளை
ஈன்ற தாய் போல்....


விண்மீன் வித்தைகளில்
நிலவின் வெள்ளி இதழ் சிரிப்பில்
அண்ணாந்து பார்த்த என்னை
அயராமல் ஈர்த்தவள்...


இரவுகளின் மௌனத்தை
கிராமத்துக் காற்று முத்தமிட
தமக்கென்றே இரவு வருகிறது
என்று
உச்சஸ்தாயியில் கீச்சிடும் பூச்சிகளின்
காதல் கீதங்களுடன்


அணைத்தும் ஒருங்கிணைய
அது ஒரு லயிப்பாய்
என் இதயத்தில்
இசை பாடிய இளமையாகும்.


நான் எழுதாத பருவத்திலும்
இதயம் எழுதிய கவிதையாய்
இயற்கையின் வனப்பில்
என்னை இழந்த பொழுதுகள்...


கண்களின் முதல் சுவாசமாய்
அவள் அழகையே
முகர்ந்தேன்


அமுதின் இனிமை அறியாச்
சிசுவாய்
அவளையே பருகினேன்....


சோகங்கள் வரும் என்று
வாழ்வின் திருப்பங்கள் காத்திருக்க
என்னுடன் வந்த
சுகமாய் இருந்தாள். 


நான் போடாத பாதைகள்
எனை அழைத்த போது 
அறியாமல் திகைத்த என்னை
அரவணைத்து

இடர்களில் தடுமாறி
இன்னலில் அழுத போது
அறியாக் கரங்களால்
என் கண்ணீரை துடைத்தாள்


வாழ்வின் கண்ணிமைகள்
ஒரு முறை
திறந்து மூடும் பயணமாய்


பயணிக்கும் என் பாதையில்
அவளே நடை பயில்வித்தாள்
நடையாகினாள்...


வார்த்தைகள் தேடும்
வாக்கியத்தின்
நாக்காய்,
வாக்காய்
அர்த்தங்களாய்


என்னோடு....
அவள் நான்
இல்லாத பயணமா
என்று
சன்னலோரம் தனிமையில்...
அவளுடன்...



Tuesday, February 23, 2010

எல்லாம் விதி....

விதி விதியென்று
வையக மாந்தர் 
வாழ்வின் வழிதனில்
வாழும் பொழுதினில் 
விரக்தியில் புலம்பா 
வேளையும்  உண்டோ?


வியப்பில், அதிர்வில்
விடியாத் துண்பத்தில்
விதி வசமேன்றே  
வீழ்ந்து அழாத
உள்ளமும்  உண்டோ? 

பிறந்தது முதலே
பிரியா வார்த்தையாய்
உடன் வரும் விதியின்
விதிதான் என்ன?  
எது விதி என்றே
என் மனம் அலசிட
எத்தனை முயற்சி
எடுத்தும் அறியா
என் செயல் கூட
என் எதிர் நின்று
சிரிக்கும் விதியோ?


வேண்டாம் என்று நாம் 
ஒதுங்கிட முயல்கையில்
விரலைப் பிடித்து
விணையாய்   தொடரும் 
ஒட்டி உறவாடும்  
வேண்டா விருப்பின்
பெயர்தான் விதியோ?


காலையில் எழுந்ததும்
கண்களை மூடி
கடவுளை வேண்டி
காரியம் தொடங்கையில்
கடந்தது பூணை
காரியம் கெட்டதே
எனக் கண் மூடிக் 
கலங்குதல் விதியோ?   

குறிகள் பார்ப்பதும்
கண்டம் பார்ப்பதும்
குனியாத் தலையில் 
குட்டுப் படுவதும் 
கண்கள் பதியாப்
பாதையில் இடர்வதும்
குங்குமம் விழுவதும்
விதவையைக் காண்பதும்
பல்லியின் சொல்லில்
பலன்கள் பார்ப்பதும் 
அறிவியல் விதியோ?
அறியாமையின் விதியோ?

மனிதர் ஓர்குலம் 
மனங்கள் ஒன்றென 
மதியின் ஆய்வில்
மனிதன் செல்லா
மடமை விதியோ?

வண்ணத் தோல்கள்
வாய்க்கப் பெற்றோம் 
வண்ணப்  பிரிவினை
ஏய்க்கப் பெற்றோம்
சாதிகள் குலங்கள்
உயர்ந்தவன் தாழ்ந்தவன்  
வையம் பெற்றதும்
உலகம் மடமையில்
உழலும் விதியோ?

வேண்டிய விருப்பங்கள்
வேண்டா விழைவுகள்
நடப்பின் தவறுகள் 
எண்ணாச் சிறுமை 
நமக்குள் வந்த 
நிகழ்வும் விதியோ?  

நல்லது நடப்பின்
மகிழ்வது நடப்பு
நல்லது நடந்ததை
மறப்பதும் நடப்பு....
இது நல்விதிஎன
இதயம் சொல்லாமல்
இழப்பை மட்டும்
இழிவாய் சொல்லும்
இதுதான் மாந்தர்
இயல்பு விதியோ?

மனிதனின் விதியை
மனிதன் அறிந்திட
மறுக்கும் கிறுக்கு
மடமை விதியோ?

விதியைத் தேடி
வீதி வீதியாய்  
விதி விதியென்று 
விதியாய் அலைந்தும் 
விதியின் வினோதம் 
அறிகிலேன் நண்பா 
விதியின் அர்த்தம் 
சொல்வாயோ நண்பா?  

Friday, February 19, 2010

கவி தை நின் நினைவாய்...

கவி தை கேட்டாள்.
கவிதை ஒன்று.
கவியான அவளே
கவி கேட்ட பொது
கவிதைக்கு  வெட்கம்
கண்மூடிக் கொண்டது!


காணாத விழிகளிலே
கற்பனையாய் ஒளிரும்
கவி சொன்னாள்; மின்னல்
கவி செய்த பார்வையென
கவின் பாடும் பாசக்   
கவிமொழியும் அவளானாள்


கவிழ் வானச் சூரியனின் 
கட்டழகுக்  கலை போலே
கவிதேடும் இதயத்தில்
கண்முன்னே ஓவியமாய்
கவி சொல்வாய் என்றவளே  
கவித் தருவாய் நின்றாள்  
கவிச் சொல்லாய் நெஞ்சினுள்ளே 
கவி பொழிந் தாள்; வென்றாள்


மதியானாள்; மதிஎண்ணும் 
நினைவுகளின் நதியானாள். 
புலர்கின்ற பொழுதெல்லாம் 
புதிதான ஒளியானாள்....   
காலங்கள் கொண்டுவரும்
காணாச் சுழற்சியிலே
வருவதும் போவதும்
காலவிதி யெனச்சொன்னால்
காலத்தால் மாறாத
கருவாக நிற்கும்
கவி அன்புப் பவித்திரமாய்
கவியோடு வாழ்வாள்
கவியன்று எனையே 
கவி பாடக் கேட்டாள்
கவி சொல்லும்   கவியாய்
கவித்துவமப் பவியாய்
கவியானாள் ....
என் கவியானாள்.... 

Wednesday, February 17, 2010

நீ....

மனம் என்ற கோயிலின்
மறைந்த சுவர்களிலே
எழுதிய மந்திரம் நீ...

நான் சொல்லாமல்
தானே எழுதிய
அகத்தின் அர்த்தமாய்

தானே முடுக்கி
தானே இயங்கும்
தான்தோன்றியாய்
உளறும் வார்த்தைகளில்
தாரக மந்திரமாய்
நீ....

ஒரு உயிரின்
இயக்கமாய்
இதயம் துடிக்க
இதயத்தின் உயிராய் நீ....

மாயம் எண்ணி
வியக்கும் சிறுபிள்ளை போல்
சுற்றிச் சுற்றி
உன்னைத் தேடும்
ஓயாத ஓட்டத்தின்
காலடித் தடங்களும் நீ....

காதல் இதயத்தின்
கண்களானாய்!
இமைகளின் இருளில்
இதயத் துடிப்பில்
அருகில் எனக்குள்
ஆனாலும்
கானல் போல் நீ....

இருந்தாலும் மூழ்கிவிட்டேன்.
சொல்லாத சுகமாக
எனக்குள்
கடல் போல் நீ.....

என் பயணத்தின்
ஒவ்வொரு நொடியும்
நீ.....

காதலின் தூரமும் நீ.
காதலின் அருகும் நீ.
அணைத்தும்
நீ...நீ...நீ.....

Saturday, February 13, 2010

காதல்... ஃப்ளாஷ் பேக்


காதலர் தினத்திற்கு
ஒரு கவிதை.
கங்கணம் கட்டிய உள்ளம்
காலங்கள் பல விட்டு
பின் ஓடி
காதல் நிறைந்திருக்கும்
மௌனக் கூடத்தில்
ஒரு ஃப்ளாஷ் பேக்... போல்

பார்வைகளின் சிறு ஸ்பரிசத்தில்
பறந்த பொழுதுகளின் முகவுரையில்
தவம் கிடந்த நெஞ்சினிலே
காவியங்கள் எழுதிய
காதல் உணர்வுகள்...

எனை நானே புரட்டிய போது...
எத்தனை வயது என்பது இல்லை.
காதல் ஒவ்வொரு நொடியும்
எனை விட்டதில்லை.

கேள்விகள் இல்லாத பவித்திரமாய்
கேட்டுப் பெறாத தானமாய்
காதல் செய்த யாகம்...
உள்ளமே அதில் தானம்...

அடுத்தது எதுவும் எண்ணாமல்
அறிவின் நிழலை அண்டாமல்
அவள் நிறைந்த இதயத்தில்
அன்பே பொழிந்தது பன்னீராய்....
அர்த்தங்கள் கேளாமல்
அழுத விழிகளில்
அன்பே வழிந்தது கண்ணீராய்...

உணர்வுகளில் உன்னதமாய்
ஒரு உண்மையின் தரிசனமாய்
ஒவ்வொரு இதயமும்
லயிக்கும்...
தன்னை மறக்கும் தருணம்....

காதல் தரும் சுகம்
காதல் மட்டுமே தரும்...

யோகிகள் போல்,
ஞானிகள் போல்,
எங்கோ தேடாமல்....
இதயத்தில் குடியிருந்த
பரம்பொருளாய்,
யதார்த்தமாய்
உயிரில் கலந்து
உருவம் தந்த காதல்...

காதல் கொண்ட இதயம்
கொண்டிருந்தேன்
என்ற ஒரு உணர்வே
மூடிய பக்கங்களில்
மூச்சின் முகவரிகளாய்
எஞ்சிய வாழ்வின்
எழுதாச் சரித்திரமாய்...

என் காவிய வாழ்வின்
காதல் ரேகைகளில்
கால்கள் சென்றன...
காலம் செல்கின்றது!

காதல் இல்லாத தினமில்லை
காதல் இல்லாமல் நினைவில்லை....
காதலில்லாமல் நானில்லை.



Monday, January 25, 2010

துளிகள்...

எப்போதும் எனைப்பற்றி
ஏன் பரிசீலனை?

பூட்டிய கதவுகளின்
புழுதி துவாரங்களில்
வெளிச்சமாய் நீ
வரைந்த ஓவியங்கள்...

பேசாமல் இருக்கும்
வாய்க்குள்
பேசிய வார்த்தைகள்
சுகமாய் உன்னுடன்
வாசித்த கவிதைகள் .....
உன்னையே இதயம்
சுற்றிய போது
சுவாசித்த சுவடுகள்...

இயற்கையின் விதிகளில்
இயங்கும் சோதனைச் சுவடிகளில்
மனிதக் கருவூலங்கள்...

மதியின் மதியில்
மறுபடிச் சுரக்கும்
மனதின் ஊற்றுக்கள்...

ஒவ்வொரு வாழ்வும்
ஒவ்வொரு வகையில்
ஒவ்வொரு ஓவியமே
படிக்கத் தெரிந்த
பார்வைக்கெல்லாம்
ஒவ்வொரு காவியமே!

வாழ்க்கை வானம்
விரிந்து கிடக்கும்
தூரம் தெரியாது
போகப் போக
எல்லைகள் எங்கே
எனக்குத் தெரியாது....

தூரம் தேடி போகும் முன்னர்
செய்யும் பயிற்சிகள்...
அகிலம் அளக்க
அளவுகோல் இல்லை
அதனால்தான்
அணுவை அளக்க முயன்றேன்...
இதய அணுவை துளைக்க முயன்றேன்...


கடவுள் படைப்பில்
தெரியும் துளிகள்
ஒவ்வொன்றிலுமே
உலகின் அர்த்தம்
உறைந்து கிடக்கும்
உறவை உணர முயன்றேன்...

அப்படியிருந்தும் ஏன் கேட்கிறீர்கள்?
என்னைப் பற்றியே
எப்போதும் ஏன் பரிசீலனை என்று?

Saturday, January 23, 2010

எண்ணக்குமிழ்

எண்ணக்குமிழ் ஒன்று
எனக்குள் எழுந்தது...
என்னை விட்டுவிட்டு
எங்கோ திரிந்தது

கனவின் சுதந்திரமாய்
காற்றில் பறந்தது...
அருவமாய் உணர்விற்கு
பாலம் அமைத்தது

உலகின் பரப்பையெல்லாம்
நொடியில் கடந்தது
உன்னைக் கண்டது
பிம்பமாய் பிரதியாக்கி
உள்ளச் சுவர்களிலே
ஓவியமாக்கியது

சாத்திரம் கோத்திரம்
சாதகம் மறந்தது
சூத்திரம் சூசகம்
யாவும் இல்லாமல்
அன்பில் ஒளிர்ந்த
ஒளிவட்டமாய்

இதய வானில்
இதமாய் பறந்தது
என்னில் பிறந்தது
எங்கோ கலந்தது

காதல் காற்று போல்
கண்ணிற்கு தெரிவதில்லை
காதலே காற்றாகி
சுவாசிப்பேன் தெரிவதில்லை

எண்ணக் குமிழ் ஒன்று....