Tuesday, December 29, 2009

வழித்துணை...

அன்பெனும் உணர்வு அகம் பெருக்கெடுக்க
அறிவும் அகந்தையும் அடுத்தது மடுக்க
பண்புகள் நல்லவை நலம் உளம்சேர்க்க
வின்எலை அளவிலா வித்தகம் கற்றேன்

மட்புகழ் பொட்புகழ் மதிசெரி கற்ப்புகழ்
மனிதச் சிறுவிலே மாறிடும் உறுப்புகள்
மக்கிடும் சிக்கலில் மிக்கொரு நித்தனாய்
மாய்த்தனை சிற்ப்புகழ் மாக்களில் எத்தனாய்
மிக்கிய சேர்வினை மீதலில் வாழ்ந்தவா
மேன்மைசேர் திருவினை அன்பிலே உறைந்தவா!

எப்பெரு சக்தியின் முப்பரிமாணமாய்
எத்தகு நிலையும் அன்பினில் உய்த்திட
வித்தகு செவ்வினை சீரிய உளமே
வீசு நல் வீரியம் அன்பே!

சொக்கிடும் சுகந்தமே சோர்வறு வசந்தமே
சூழப் பறந்திடும் சுதந்திரப் புறாவே
வாழ நல்வழி மேல்நின்று சொன்ன
வழித்துணை விழித்துணை யாவுமாய் உற்ற
வாஞ்சையும் அன்பும் வழித்தடம் ஆகுமே....

Thursday, December 17, 2009

தேடல்...

அங்கும் இங்குமாய் அலைந்த பொழுதுகள்
ஆசை கனவுகள்...
மோகம் கொண்ட வாழ்க்கை கதையில்
மூடிய பக்கங்கள்...

வருவது என்ன அடுத்து என்றால்
வெள்ளைக் காகிதங்கள்
வாழ்க்கை வாசல் திறந்து கிடக்கும்
எழுதாச் சரித்திரங்கள்...

உள்ளம் சொல்லும் உணர்வுகள் யாவும்
நன்மை பயக்குமா?
நல் சொல்லின் வழிதான் வாழ்வில்
செல்தல் உண்மை ஆகுமா?

உன்னை அறிய முயன்ற தருணம்
உன்னில் இருக்குமா? இல்லை
ஓட்டை விழுந்த பாத்திரம் போலே
ஒழுகி சறுக்குமா?

நீயும் நானும் போகும் இடத்தை
மாற்றிட இயலுமா?
பயணம் ஒன்று பாதைகள் வேறு
அறிந்திடல் கடினமா?

மானுட வாழ்க்கை வாழ்தலில் என்ன
மகத்துவம் கேட்டவரை
சோதனை வாழ்க்கை சாதனை என்று
சொல்லிடவே தகும் அல்லால்
வெறும் போதனை மட்டும் மனிதனின் வாழ்வை
மாற்றிட இயலுமா?

தோல்வியும் வெற்றியும் ஓவ்வொரு பக்கம்
அர்த்தம் ஒன்றுதான்
தோற்றவன் கற்றலும் வென்றவன் கற்றலும்
வாழ்க்கையின் தேடல்தான்

உயரே உயரே செல்லும் ஆசைகள்
உனக்கு உனக்கு என்பது எல்லாம்
பெயரே இல்லாக் கல்லறை ஒன்றில்
உறைந்த உணர்வுகள்...

வாழ்க்கை ஒருமுறை உனக்குக் கிடைத்த பலனே
வாழ்ந்து செல்லடா நண்பா
வன்முறை குரோதம் வஞ்சகம் விட்டு
வாழப் பாரடா....

Monday, December 14, 2009

காற்று...

நீ
எங்கிருந்து வந்தாய்?
என் மூச்சாகினாய்?

தென்றல் சுகம் என்பது
உன்னால்தான் தெரியும்...
சுமைகளும் வெறும் பஞ்சாகும்
உன்னால்தான் தெரியும்...

இருண்டு கவிழ்ந்திருந்தேன்
நீ விளக்கானாய்..
இல்லாத எல்லைகளில்
ஒரு இலக்கானாய்...

தூரங்கள் அருகினிலே
நான் உன் அரவணைப்பில்
கண்ணயர்ந்தேன்....

கனவுகள் கலையும்
என்ற உண்மை நீயானாய்...

வலிகளை சுமந்தவனாய்
வழிதனை மறந்து நின்றேன்...
நினைவினில் கலந்த உன்னை
நீக்கிடத்தான் இயலுமோடி?

என்னை கேட்கிறேன்
என்னிடம் சொல்கிறேன்...
என்னில் எல்லாமும்
நீயானாய்....

கண்ணில் வழிகின்ற
கண்ணீர் கானல் இல்லை...
உன்னை சுமந்த உள்ளம்
சுரந்த வேர்வையடி...

எங்கிருந்தோ வந்தாய்
எனைத் திருடிச் சென்றாய்...
காற்றின் விசையினிலே
பரந்த சிறுதுரும்பாய்
காணாமல் போனேனே...
என் கண்ணில் விழுந்தேனே

உன்னை முகர்ந்ததனால்...
என்னை மறந்தேனே....
எங்கிருந்து வந்தாய்
நீ என் மூச்சாகினாய்?

Sunday, December 13, 2009

கட உள் ...

பல கோடி உயிர்கள்....
பரந்த பூமி
பேசியும் பேசாமலும்
ஜீவராசிகள்!


மனிதன் மட்டும்
மகத்துவம் பெற்றான்
மனிதனின் மத்தியில்.


புனிதம் என்ற பெயரில்
வரைந்த வரைகோடு.
புண்ணியம் என்ற பெயரில்
புணைந்த பூச்சுக்கள்...


புற்கள்,
செடிகள்,
கொடிகள்
மரங்கள்
விலங்குகள் என்றும்
அணுவினும் சிறிய
நுண்ணுயிரிகள் என்றும்


படைப்பின் சிறப்பு,
உன்னதம் என்று
இருப்பதை அறிந்திட
எடுத்த முயற்சியில்
அறிந்ததைச் சொல்லி
தெரிந்தவன் ஞானியா?



இகம் பரம் என்று
தம்மை அறிந்திட
தவம் பல புரிந்து
காவியில் காலம்
கழிப்பவன் ஞானியா?


படைப்பின் வட்டத்தில்
பயிற்சி செய்திடும்
பண்பாடு கொண்டு
அன்றாடம் பார்க்கும்
அவனவன் ஞானியா?

ஒருமுறை கொடுத்த
ஓருயிர் கணக்கில்
சுகம்பல வேண்டும்
சுதந்திரன் ஞானியா?

வினோத உலகின்
விந்தைகள் பார்த்து
வியக்கா உள்ளம்
வித்தகன் ஞானியா?

வந்தவன் போகிறான்
வெந்தவன் ஆகிறான்
உற்றவை கற்றவை
உதறிச் செல்கிறான்

வரவு செலவு
செய்பவன் யாரோ?
வாழ்க்கைக் கணக்கை
புரிந்தவன் யாரோ?
தெரிந்தும் பயணம்
புரிந்தும் இன்னும்
கொலைகளும் கொள்ளையும்
புரிவதும் ஏனோ?

சொத்தும் சுகமும்
மனித வாழ்க்கையா?
அன்பும் உறவும்
மனித வாழ்க்கையா?
ஒருவனை கொன்று
ஒருவன் வாழ்ந்திட
செய்யும் கொலைகள்
மனித வாழ்க்கையா?

மனிதன் என்பது
விலங்குகள் போலே
மனிதன் தனக்கே
வைத்த பெயர்...

ஆயிரம் ஞானியர்
இருந்தும் உலகில்
போரும் பகையும்
வளர்வது ஏன்?

அரசியல் பாசறை
சூசகம் வளர்ச்சி
ஆயிரம் வார்த்தைகள்
வளர்ப்பது ஏன்?

பொருளாதாரம் என்ற பெயரினை
மனிதன் மாற்றிட வேண்டும்
மனிதாதாரம் என்ன என்பதை
மனிதன் உணர்ந்திட வேண்டும்

விலங்குகள் போலே வாழும் மனிதன்
வீழ்ந்திடத்தானே வேண்டும்...
விதிகளை மாற்றி சதிகளை விட்டு
புதியவனாகிடல் வேண்டும்...

இறைவன் உள்ளான் என்று சொல்லி
தர்மம் என்றும் புண்ணியம் என்றும்
பொழுதை போக்கும் ஒரு கூட்டம்

நாட்டை காக்கிறோம் உலகம் காக்கிறோம்
என்று உளறி போரில் மாய்க்கும்
இன்னொரு கூட்டம்

ஒருவன் கண்டது ஒருவன் கொண்டது
சுயநல வாழ்க்கை விலங்கினச் சேர்கை
இயற்க்கை விதிகள் கலாச்சாரம்
மனித விதிகளும் மாயைப் போர்வையும்
யார் செய்தார்?
இல்லை எது செய்தது?

காணாக் கடவுளைக் கேட்கின்றேன்...மனம்
திறந்து உனை தேடுகிறேன்..
மனிதம் என்றொரு வார்த்தை மட்டும்
மனிதம் ஆகிடல் ஆகாது

மனிதன் கடவுளின் மறுபுறம் என்றால்
கட உள் மனம் கொஞ்சம் மனிதா...
மறுபுறம் கடவுள் உள்ளார் -அவர்
கட உள் என்றே சொன்னார்....
கடவுள் கட உள்.....

Thursday, October 8, 2009

சிந்தையை தொலைத்துவிட்டேன்...


நல்ல நிலவொளியில் நயமான தென்றலுடன்
தெள்ளத் தெளிவு தரும் இதமான மன நிலையில்
உள்ளத் துறவுகளை உயர் பாங்கில் வளமாக்கி
சொல்லத் துடித்த மனம் சுகந்தங்கள் கொண்டதடி

கள்ளமில்லா தூரத்தில் வான் பரந்த பட்சிகளின்
கானங்கள் மனம்நிரப்ப செவ்வான புரவியிலே
கோலங்கள் இட்டரவி தேனான சிந்தையினை
மாயங்கள் செய்து மயக்கிடத்தான் வைத்ததடி!

நானம் கொண்டவளாய் பனித்திரைக்குள் ஒளிந்து
வதனம் மறைத்தவளாய் நின்ற நங்கை
கைபிடித்து சென்றசுகம் கனவுலகாய் சிலிர்த்த
ஜாலம் செய்ததெல்லாம் இயற்க்கைக்குமரியடி ...

உள்ளத்தில் கசந்திடும் ஒவ்வொரு நாட்சுமையும்
ஒருகணத்தில் மாற்றிவிடும் தாயின் அரவணைப்பாய்
யுகமாய் வீற்றிருக்கும் அவள் மடியில் முகம் புதைத்தால்
சகத்தில் பிறந்ததற்கு நல்ல பலன் ஆகுமடி...

அவளழகு இல்லாத ஒருதிசையும் இல்லையடி
அவள்மீது கொண்ட மோகம் தீராத தாகமடி
நினைவோடு நானென்ற அகங்காரம் நலமாக
நிஜமான ஓருருவாய் கற்பித்த ஆசானாய்

நீசம் செல்லும் வரை அவளோடு வாழ்ந்திடுவேன்
நித்தம் முத்தமிடும் அவளோடு மாய்ந்திடுவேன்
என்னே அழகு என்று சுகம்கொள்ளும்
இந்த நினைவினிலே சிந்தையை தொலைத்துவிட்டேன்
கண்ணே நீ கொஞ்சம்
கவலைகளை விட்டுவிட்டு
என்னோடு வந்திடுவாய்...
இவள் எழிலில் கலந்திடுவாய்....


முகில்.




Friday, September 11, 2009

ரகசியங்கள்...

எண்ணங்கள் ஓடும்
இதயத்தில் சுவடுகள்
எத்தனையோ ஆணிகள்
நினைவுப் படங்களை
நெஞ்சினுள் அரைந்திருக்கும்....

ஒவ்வொரு இதயமும்
ஒரு மௌன வானமாய்
நினைவுப் பறவைகளை
தன் சொந்த வானில்
பறக்க வைக்கும்
ஆம் ... தன் வானில் மட்டும்தான்!

மெல்லிய உணர்வுகளின்
ரகசியக் காப்பறையாய்
சொல்லாத முகவரிகள்
ஒவ்வொரு உயிரையும்
எங்கோ கூட்டிச் செல்லும்
பாதைகள் தேடி
பரிதவிக்கும்

பிறப்பின் ரகசியங்கள்
பறக்கும் உயிர்ப்பறவை...
பாதை தேடித் தேடி

கூசும் வழித்தடமும்
வழுக்கும் அடிகளுமாய்...
வாழ்க்கை...
மனதிடம் கேட்கிறேன்!
என் கையை கொஞ்சம் பிடித்துக் கொள்வாயா?

Thursday, July 23, 2009

மன்னிக்க வேண்டுகிறேன்...

நிலம்
நீர்
காற்று
ஆகாயம்
நெருப்பு
எல்லாம் உனது....

நான் மட்டும் தனியா?
மன்னிக்க வேண்டுகிறேன்
நான் நீ எல்லாம் ஒன்றுதான்...

உன்னை நான் சுவாசிக்கிறேன்...
உனது அனுமதி பெறாமலே...
உன்னில் மூழ்குகிறேன்...
உனது அனுமதி பெறாமலே...
உன்னால் எரிகிறேன்
உனையும் எரிக்கிறேன்...
உனது அனுமதி பெறாமலே
உன்னுடன் நடக்கிறேன்
உனது நிலத்திலே..
உனது அனுமதி பெறாமலே
உன்னால் பறக்கிறேன்
எங்கு தெரியவில்லை
உனது அனுமதி தேவையில்லை ....
மன்னிக்க வேண்டுகிறேன்...

நான் நீ யார்?

Friday, June 26, 2009

முட்பதர்....

சோலையின் ஓரத்தில்
முட்செடி போல்
விரும்பாத உயிராய்
வீணாகும் எனக்கு...

சுகங்களின் வேஷத்தில்
சோகமாய் அழுதிடும்
கண்கட்டி வித்தையை
கற்பித்தாய் அம்மா

இருள் அகன்று
ஒளி வரும்
என்று காத்த யுகங்களை
கண்களிலே பூத்திருக்கும்
கரையான் புற்றுகளாய்
கவலைக் காளான்களாய்

மரபின் சுழற்சியிலே
சுவாசம் அழன்றது
மதியின் அயர்ச்சியிலே
மழழை ஆனது...

நான் எங்கோ
ஏங்கி நிற்கும்
உருவமில்லாத் தனிமரமாய்

பக்கத்தில் வருவதற்கு
காற்றும் பயப்படும்
என் முட்களில்
சிக்கி மூர்ச்சையாகிடும்

என் கனவுகளை
சுமந்த உன் மூச்சில்
கல்லறை கவிதையாய்
மறைகின்றேன் அம்மா...

என் தோற்றமும்
மறைவும்
நான் மட்டும்
அறிந்து கொள்ளும்
விசித்திரம் அம்மா.....

Thursday, June 4, 2009

நாளை அந்த நாள் வருமோ?













வெண்ணிலா வெளிச்சத்தில்
தென்றல் விளையாடும்
திண்ணையில் கிடந்த சுகம்

வானத்து விளக்குகளின்
வர்ண ஜாலங்களை
அண்ணாந்து பார்த்து
அயராமல் நின்ற சுகம்

காலாற வயல் வரப்பில்
நாற்றுகளின் நடனத்தில்
மனம் லயித்து சென்ற சுகம்

பொதிகை மலை சாரலும்
பூவாசத் தென்றலும்
புன்னகைக்கும் பூக்களுமாய்
பூரிக்கும் இயற்கை எழில்
என்னூரின் இதமெல்லாம்
இல்லாமல் வாழ்கின்ற
வாழ்வு கொஞ்சம் வலிக்கிறது

நாலரை மணிக்கெல்லாம்
கண்விழித்து காணம் பாடும்
குருவிகளின் கொக்கரிப்பும்
புலர்கின்ற சூரியனின்
விரிகின்ற ஒளியிறகின்
செவ்வானக் கீற்றுகளும்
சிந்தையினைக் கொள்ளை கொள்ளும்
பெண்ணாரின் கோலங்களும்
காலைநேரக் கலப்பைகளும்
வேலைசெல்லும் உழவர்களும்
பள்ளிசெல்லும் சிறுசுகளும்
பாம்படக் கிழவிகளும்
வாய்கிழிய கூவி விற்கும்
மிதிவண்டி வியாபாரிகளும்...
வண்ணமாய் நெஞ்சினுள்ளே
வாழ்கின்ற சித்திரங்கள்
இவை இல்லாமல் வாழ்கின்ற
வாழ்வு கொஞ்சம் வலிக்கிறது.....

கிராமத்து வாழ்வின்
ஞாபகங்கள் சிந்தையிலே
கிளறுகின்ற இன்பம்தான்
கனவுலகில் வாழ்கின்ற
காட்சிகளாய் பிரதிபலிக்கும்

காலத்தின் போக்கில்
காற்றடிக்கும் திசையில்
போகின்ற வாழ்க்கை...

திட்டங்கள் தீட்டி
தீர்மானம் கூட்டி
தேவைகள் மீட்டி
செல்கின்ற வாழ்க்கை

ஒவ்வொன்றாய் விட்டுவிட்டு
ஒவ்வொன்றை பிடித்தவராய்
தேடல்கள் மிகுந்த
சிற்றீசல் வாழ்க்கை....

போனதெல்லாம் வாராது
என்றமொழி தரும் ஏக்கம்
என்மனதில் உள்ளதடி
எப்படித்தான் சொல்வதடி?

நாளை அந்த நாள்வருமோ?
நானும் ஏக்கம் கொண்டுவிட்டேன்
ஆயிரம் மைல்களுக்கு அப்பால்என்
சிறுபிள்ளை உள்ளத்தின்
சிந்தனைகள் வாட்டுதடி...

என் மனதின் ஏக்கம்...
சொன்னாலும் கேட்காமல்
சுவரிடம் பேசிய
சோக வார்த்தைகளாய்
நெஞ்சினுள்ளே சுடுகிறது....
நேரம்தான் போகிறது...

நாளை அந்த நாள் வருமா?
சொல்லடி என்னவளே!

Monday, May 25, 2009

வீரத் தமிழரை வணங்குவோம்...

உயிர்கள்
எங்கிருந்தாலும்
உயிர்களே!
எப்படியிருந்தாலும்
உயிர்களே!
எல்லா உயிர்களுக்கும்
சுதந்திர மூச்சில்தான்
சுகம் என்பதை
சொல்லியா தெரிய வேண்டும்?
மூச்சு விடுவதற்கும்
கண் விழிப்பதருக்கும்
கப்பம் கட்டும் வாழ்க்கை
அடிமைத்தனத்தின்
அடக்குமுறை...
மனிதத்தின் உரிமைகளை
சுமூகமாய் கேட்ட போது
பலவந்தம் காட்டி
அராஜகம் செய்தது...
அரசாங்கம் என்ற பெயரில்
சர்வாதிகாரம் செய்தது.
வரலாற்றின் ஏட்டுகளில்
பலமுள்ளவன் பதிகின்றான்...
பலமற்றவன் சிதைகின்றான்...
சுதந்திரம் வேண்டும் என்று
சுதந்திரமாய் உள்ளவன் சொல்வதில்லை!
சுதந்திரம் கேட்டவன்
சுதந்திரத்தைப் பறிப்பது
மனிதாபிமானம் இல்லை...
சுயநலச் சகதியில்
அரசியல் சூது.
தீவிரவாதி என்றும்
தீவினை செய்பவன் என்றும்
சுதந்திர விரும்பி
பட்டம் பெறுகிறான்
உள்ளங்களும்
நல் உணர்வுகளும்
மதிக்கப்படாததால்
போரில் இறங்கிய புலிகளில்
தமிழனாய் வாழ்ந்து
தமிழீழம் வேண்டி
தம்மை அர்ப்பணித்த
தமிழ் மகன் பிரபாகரன்...
போரில் வீர மரணம் அடைந்தான்...
தமிழ் தமிழ் என்று சொல்லி
தமிழன் மறைந்தான்...
ஆயிரமாயிரம் உயிர்கள்
ரத்த ஆற்றில் மூழ்கின

நாடு விட்டு தப்பியவர்
நான்கு நாட்கள் போராட்டம்
எம்மவரை காத்திடுங்கள்
என்று சொல்லிக் கதறிய பின்
தத்தம் வாழ்க்கைச் சிக்கல்களை
சிலாகிக்க சென்றுவிட
தமிழனாய் கண்கள் பனித்தன
தமிழனாய் மனம் துடித்தது...
தமிழன் தொடங்கிய
போராட்டத்தில்
தன்மானம் இருந்தது
தாய் நாடென்று கருதிய இலங்கை
அவமானம் செய்தது...
தமிழன் தன் சுதந்திரம் காக்க
தாங்கிய புலிக்கொடி
தரணியிற் பறந்தது
தமிழர் உயிரினைக் கொண்டது...
போர் என்று வந்து விட்டால்
உயிர் மாய்ப்பதும்
மடிவதும் மரபுகள்.
அரசியல் சூசகம்
மக்களை பற்றிய அக்கறையின்மை
சர்வாதிகார போதையும்தான்
தமிழனை மதிக்காத பகட்டானது...
வேண்டிய சுதந்திரம்
எட்டாக்கனியாய்
போனதோ நண்பா?
வேட்கை தீர்த்திட
வேதனை சேர்ந்து
வஞ்சகம் கொண்ட
நெஞ்சினர் நம்மை
வாட்டிட போட்ட திட்டமோ நண்பா....
வீரப்போர் புரிந்து
தமிழனாய் மண்ணில்
தலை சாய்த்த வீரரை
தமிழர் என்ற முறையில்
வணங்குவோம்
சுயநலம் இல்லாமல்
பொதுநலம் வேண்டி
நடந்த புனிதப் போரில்
உயிரினை இழந்த
தமிழீழ தணயரை போற்றுவோம்...
சுதந்திரம் கேட்ட
உயிர்களின் ஓலம்
போர்முனை புழுதியில்
சமாதியாகிட
சொந்தமும் பந்தமும்
வாழ்க்கையை தேடிட
மடிந்தவர் ஆத்மாவின்
தாகம் தீருமா?
சுதந்திரம் எது என்று
தெரியாமல்
வீரப் புலிகளாய்
மாய்ந்தவர் ஆன்மா
சாந்தியடைந்திட
வீர அஞ்சலி செலுத்துவோம்...
வீரத் தமிழரை வணங்குவோம் ...

Sunday, May 24, 2009

தமிழன் எங்கே?

கதறல்கள்...
உயிரின் ஓலங்கள் ...
கண்ணீர் சுட்ட கன்னங்கள்
கருவிழி வட்டங்கள்
செந்நீர் சிந்திய
சகோதரர்கள்....
இலங்கை எரிய
எத்தனை ராவணர்கள்?
கேட்டது தவறா?
சிந்தியுங்கள்...
சுதந்திரம்
எமது பிறப்புரிமை
என்ற மொழி தவறா?
உணர்வு தவறா?

நீங்கள் சற்றே
எம்மிடத்தில்
இருந்து பாருங்கள்...
உயிரை விட்டு
உருக்குலைந்து
சின்னா பின்னமாய்
உறவுகளை தொலைத்துப்
பாருங்கள்...

உங்கள் வீட்டு
சன்னல்கள்
ஏன்
மூடப்பட்டே உள்ளன...

வெளியே வேகும்
தமிழன் சடலங்கள்
திரைத்துளியும்,
பாடல் நாடகங்கள்
பார்க்கும்
தொலைகாட்சி
சுகங்களாகவா போய் விட்டன?

உங்கள் சுவாசத்தில்
கவலையின் பயமில்லை
உறவுகள் இறக்கும்
சோகம் இல்லை

எட்டாத தூரத்தில்
தமிழன் என்று சொல்லி
தொடாத உறவுகளின்
அந்நியமாய்

வாழ்க்கையின் வரலாற்றில்
வாழும் களைகளாய்
வாழ்ந்த பொய்களின்
நிஜச் சாயல்களாய்...

தமிழா என்று நான் அழைக்கலாமா?

Wednesday, April 29, 2009

கொஞ்சம் அழுது கொள்கிறேன்...

ஒவ்வொரு மனமும் எப்போதாவது
அனாதையாகும்...
தனக்குத் தானே தவித்துக் கொள்ளும்.
உறவுகள் ஆயிரம் இருந்தும்
துறவறம் பூண்டிருக்கும்

ஏக்க சிறையினில் தன்னை
தானே அடைத்துக்கொள்ளும்
வினோத வலைக்குள் சிக்கிய
மீனாய் பரிதவிக்கும்

காலத்தின் கண்ணாடியில்
வழுகிச் செல்லும்
வாழ்க்கை பயணத்தில்
தனிமை கொண்டு
அமைதி இழக்கும்...

வளர்ந்தும் மனதில்
குழந்தையைப் போலே
வாடி நிற்கும்...

வானம் பார்த்து
இமைக்காது
கற்பனை சிறகுகளில்
அபிநயம் பார்க்கும்...

தன் உணர்வுகளையது
சொல்லத் தவிக்கும்
அன்பு தேடும்

மறைந்து ஒளிந்து
மாயை கவலைக்குள்
மறுதலிக்கும்

மனம் என்ற மாயை
நம்மை மறுபடி மறுபடி
எங்கெங்கோ கூட்டி செல்லும்.

வழி தெரியாமல்
வாழ்க்கை காட்டில்
ஏனோ தெரியவில்லை
தன்னை தானே
அனாதையாக்கும்

ஏன் என்ற கேள்விக்கு
விடை தெரியாமல்
விடுகதையாக்கும்...

Saturday, April 11, 2009

நீ...

ஒரு பட்டாம்பூச்சி போல்....

கண்களில் வண்ணமானாய்!

உன்
நினைவுகள்
படபடக்கும்
நெஞ்சில்
ஒரு சுகம்

எப்படியோ
முளைத்த சிறகுகள்
எங்கேயோ பறக்க வைக்கும்

காதல்
பூக்களாய்
நெஞ்சில் சோலையாகும்

மனதின் வீதிகளில்
சுற்றி சுற்றி
உனையே எண்ணும்
உணர்வின் சுகந்தமாய்

உன் விழிப் பார்வைகளை
மலர் என்று கண்டு
தேன் உண்ணும் வண்டு போல்

தெரியாத தூரங்கள்
திகட்டாத தேன்
சுற்றி சுற்றிவரும்

ஒரு
காதல் பட்டாம் பூச்சி.....

மறுபடியும்....

உள்ளம்
ஏதாவது உளரும்
தனக்குத் தானே
அறை கூவும்

எண்ணத்தின் வேகத்தில்
இதம் காணும்.

நிஜம்
சட்டென்று விழுந்த
முட்டுக்கட்டையாய்
கற்பனை கோட்டையை
தகர்க்கும்

இதயம் பரிதவிக்கும்
இயக்கம் நடுங்கும்

எல்லாம் மாயை
என்ற சிந்தனை
கோடி ஏற்றும்

வேதனையே வாழ்க்கை
என்ற வேதம்
நினைவில் வரும்

கற்பனையில் மறுபடியும்
சுகம் நெருடும்
மறுபடியும்
நிஜம் நெருடும்....
மறுபடியும் மறுபடியும்....

Thursday, April 9, 2009

கேள்வியும் நானே பதிலும் நானே

கேள்வி ஒன்று வந்தது -பதில்
தேடி மனம் அலைந்தது
வாழ்க்கை போன வேகத்தில் -ஒரு
வரம்பு அற்றுப் பாய்ந்தது
ஆசை கோடி கொண்ட நெஞ்சை
அமைதி கொள்வ தெப்படி
ஒன்றிரண்டா ஆசைகள்
இதய மாயை அப்படி..

மனிதராகப் பிறந்த நாம்
வேண்டுவது என்ன?

மனித வாழ்க்கை அரிதென்றால்
மானுடம்தான் என்ன?

கேள்வி ஒன்று பலவாக
பிறவிபல எடுத்தது...
பதில் அறிய இதயத்தின்
சுவர்களிலே பொரித்தது

ஒரு கூட்டுக் கிளியாக
வழி தேடி தவித்தது
பறந்துயரப் பார்த்திடவே
மொழி கூவி கேட்டது....

ஈசல் போல செல்லுகிற
பயணமிதில் படபடத்து
உள்ளுணர்வின் எதிரொலியை
உணராமல் தவிதவித்து
சாயங்கள் பூசி பொய்க்குள்ளே
புதைவோம்...சாத்திரங்கள் பேசி
வேஷங்கள் புணைவோம்...

வாழ்க்கை என்ற வாசகம்
கருவறையில் தொடங்கும்
கல்லறையில் முடியும்

நாடகத்தில் நாயகராய்
நடிக்கின்ற காட்சி
முடிகின்ற தருணத்தில்
அழும் மனசாட்சி

தொடக்கம் என்றிருந்தால்
முடிவும் உண்டு அறிவோம்
அடக்கத்தில் அன்பு செய்து
ஏன் வாழ்தல் ஆகாது
குறைகள் இல்லா சிருஷ்டி எது
நிறைகளில் நாம் மகிழ்வு கொள்வோம்

சிறைக்கதவை திறந்திடுவோம்
சிறகுகளை விரித்திடுவோம்

Wednesday, April 8, 2009

நலமா?

நாட்கள் ஓடும்
வாழ்க்கை ஓடும்
இதயம் என்ற
ஏடு மட்டும்
நினைவுக் காற்றில்
பக்கம் புரட்டும்....

அன்பு கலந்த
பக்கங்களின்
அருமை நாட்கள்
புதிய படங்களாய்
பளிச்சிடும்....

யாராய் எப்படியும்
எங்கே இருந்தாலும்
உணர்வின் நரம்புகளில்
இதமாய்
நல்ல உறவுகளின்
உன்னதம்
உரம் சேர்க்கும்....

வாழ்க்கை கடலில்
மூழ்கிய பின்னர்
நீச்சல் தெரியுமா
என்று கேட்ட
விதியின் முன்னால்
வீரப்போர் புரிந்த
புனிதர் போலே

நம்மில் எத்தனை பேர்?

வெற்றி இலக்கில்
எத்த்னை பயணங்கள்!

எங்கு செல்கிறோம்?

சுற்றிச் சூழும்
சூறாவளியில்
பயணத்தின் பாதைகள்

காற்றில் புரண்ட
வாழ்க்கைப் புத்தகத்தின்
ஏதோ ஒர் பக்கத்தில்
எழுதிய கவிகளில்
அன்பினால் சுரந்த
நட்பை நினைத்து
இத்தருணத்தில்...

மறுபடி பிறக்கிறேன்

நலமா நண்பா?

Monday, March 30, 2009

நீ...

முதல் முதல் வந்த உணர்வு
உன்னில் மூழ்க வைத்தது
உன் நினைவுகள் ஏனோ என்னை
எனையே மறக்க வைத்தது

ஒரு கனவில் எங்கோ என்னை
கைபிடித்து சென்றது- எங்கு
செல்கிறோம் என்றேன்.
நானம் இதழில் சிரித்தது...

விழிகள் பேசிய மௌனம்
இதயம் புரிந்தது-சில
நொடிகள் வானில் பறந்து
பறவை ஆனது

மூச்சுக் காற்றில் காதல்
கீதம் இசைத்தது- மோகம்
பாஷை ஆக முடிவை
மறந்தது ...

காதல் செய்த மாயம்
கண்ணில் தெரிந்தது
கனவுகளை எதிர் பார்த்து
உள்ளம் தவத்தில் கிடந்தது

நீ முதல் முதல் வந்த உணர்வு....

Wednesday, March 18, 2009

நிஜம்

ஓடிக்கொண்டிருக்கும் ஒற்றை அடிப்பாதை
நான் போட்டதல்ல
நீ போட்டதுமல்ல...

வாழ்க்கை
நீ கேட்டு வந்ததல்ல
நான் கேட்டு தந்ததல்ல

ஏற்றுக் கொண்ட
பயணத்திலே
தொடக்கம் தெரியாது
முடிவும் தெரியாது

ஓவ்வொரு நாளும்
இமைகள் விழிக்கும்
தருணம் தானே
ஜனனம்

இரவை தொடர்ந்து
இயக்கம் மறந்து
தூங்கி கிடக்கும்
மரணம்

இருக்கும் காலம்
நிம்மதி தேடி
நம்மில் எத்தனை
உள்ளம்?

அறியா பிள்ளைகள்
ஆகும் நம்மை
அறிய வைக்கும்
தருணம்

ஓடிக்கொண்டிருக்கும்
ஒற்றை அடிப்பாதை
நான் போட்டதல்ல
நீ போட்டதுமல்ல...

ஒவ்வொரு நாளும்
ஒரு முறை யாவது
உன்னை சற்றே
உற்றுப் பார்

உள்ளே இருக்கும்
உதவா அழுக்கை
உதறித் தள்ளி
வாழ்ந்து பார்

கவலை என்பது
சுயநலத் தாலே
சூழ்நிலை யறிந்து
வாழப் பார்

ஆசைச் சேற்றில்
அழுகும் உன்னை
அன்பை கொண்டு
கழுவப் பார்

நல்ல எண்ணம்
நல்ல செயலே
நலமே வேண்டும்
நயத்தைப் பார்

வாழ்க்கை
நீ கேட்டு வந்ததல்ல
நான் கேட்டு தந்ததல்ல


உறவுகள் புனிதம்
உள்ளது அறிந்து
உய்யும் ஞானம்
சேர்க்கப் பார்

இங்கு
நிஜத்தை நோக்கி ...

ஓடிக்கொண்டிருக்கும்
ஒற்றை அடிப்பாதை
நான் போட்டதல்ல
நீ போட்டதுமல்ல...


Saturday, March 14, 2009

தாயே போற்றி!

நீயின்றி நெஞ்சம்
தவிக்கிற தம்மா - உன்
நினைவுகள் என்னை
வாட்டுதே அம்மா

நெஞ்சம் நெகிழ்கிற
வாழ்க்கைதான் அம்மா- என்
கண்ணீர் துடைத்திட
நீயில்லை அம்மா


காலத்தின் கோலம்
பிரித்ததே அம்மா-நீ
ஒருவார்த்தை சொல்லாது
சென்றதேன் அம்மா

வாங்கிய வரங்கள் வேதனை அம்மா - உன்னை
பிரிந்த பின் ஆயிரம்
சோதனை அம்மா
அவை கேட்டிட நீயும் அருகிலை அம்மா

உன்னை போல்
எனையும் பார்த்திட ஒருத்தி
வந்ததால் போனாயோ
என் அன்பம்மா

தாயின்றி வாடும்
சேஎனை பார்க்க

எங்ஙனம் உன்னால்
இயல்கிற தம்மா?

ஓரளவேனும் உள்ளம்
மனிதம் கற்றது
உன்அன்பே உயர்
பண்பே அம்மா

உனைப் பிரிந்திருக்கும்
இத்தவிப்பொரு கொடுமை
உனைப்போல் தாய்
இருப்பது நினைவில்
உலகில் வாழ்ந்திட
உதவிடும் நன்மை.

நீயில்லை என்றிடல்
தவறென உணர்ந்தேன்
நினைவும் செயலும்
நீஎன் றறிந்தேன்

தாயே போற்றி! தாயே போற்றி!

இலக்கை தேடி...

வயது 44.
வாழ்க்கையின்
எதிர்பார்த்த அரைபாதி
எப்படியோ
கழிந்த பெருமூச்சு.

உடல் வளர்ந்தாலும்
மனம் வளராத மந்த நிலை..

கற்க கசடற...
வள்ளுவம் சொன்ன
இரண்டு வரி தத்துவம்
புரிந்தால்
கற்றவை கற்றபின்
நடந்தால்
நன்மை உண்மை

யாரால் இயலும்?
ஒவ்வொரு நொடியும்
தவம் செய்யும்
நிலை வேண்டும்...

மனிதம்
சாதாரணம் அல்ல...
அன்றாட விலங்கினமாய்
அவதி!

சூழ்நிலை சூறாவளி
சூன்ய வாழ்க்கை
சோக மயானத்தில்
சுடலை போல்
தனியே செல்லும்
பிறப்பின் தாகம்

பித்தம் பிணக்கு
பிரிவினை கணக்கு
வருமான வரிகளால்
வாழ்க்கையின் இலக்கு

அன்பை தொலைத்து
அறிவை அழுக வைத்து
ஆசை சொப்பனங்களுடன்

எங்கே செல்கிறேன்?
எங்கே செல்கிறேன்?

முகவரி

நீ
என்
மூச்சின் முகவரி

இதயத்தின்
வீதிகளில்
எங்கு பார்த்தாலும்
உன் பிம்பங்கள்

நீ
நான் மட்டும்
உணர்ந்த சுகம்

மின்மினிப் பூச்சிகளாய்
நட்சத்திரங்களாய்
தென்றலாய்
மலர்களின் சுகந்தமாய்
என் மனித வாழ்வின்
மறு பிறப்பாய்

என்னை எனக்கு
அடையாளம் காட்டி...

என்னை எனக்கு
அறிமுகம் செய்த

அன்பே
நீ
என்
மூச்சின் முகவரி...

என் புத்தகம்...

எழுத முயற்சித்த தருணங்கள்...
எண்ணத்தின் மோதல்கள்
எதை சொல்வது
என்ற கேள்விகள்....
மனம் மக்காய் முழித்தது!

பல வருடம் பின் சென்று
மட்டப்பா தெருவினிலே
எதை செய்வது என்று தெரியாமலே
ஓடித் திரிந்த கதை சொல்வதா

இரவு நிலா தந்த பயம்
குடை பிடித்து வானத்தை
மறைத்த கதை சொல்வதா

ஒன்பது வயதினிலே
அண்ணன்மார் புகை விட்ட
ஸ்டைல் பிடித்து
நைனாருடன் பிடித்த
பீடி கதை சொல்வதா?

மேற் படிப்பு என்று சொல்லி
மெட்ராஸ் போன அண்ணன்
பிரிவாலே அழுது மனம்
துடித்த கதை சொல்வதா?

அண்ணன் வேலையில்
சேர்ந்து விட்டாங்க
இனி மெட்ராஸ்தான்
என்று எதிர் பார்த்த கதை சொல்வதா?

பட்டினத்தில் குடி புகுந்த
முதல் நாளே
அண்ணன் காதலித்து
மணம் செய்த புது அண்ணி
அழ வைத்து மனம் நொந்த
அருங் கதையை சொல்வதா?

ஆங்கிலம் வராது என்றால்
அதை நீ எழுதாதே
அப்படி சொன்ன மாமா வார்த்தை

பாடாதே அது சகிக்கவில்லை
என்று சொன்ன அண்ணன் வார்த்தை

முயலாதே அது வீண்
என்று சொன்ன அப்பா வார்த்தை

ஊக்கம் தராத அந்த நொடிகள்
செய்த தாக்கம் பற்றிச் சொல்வதா?

இரண்டு வரிகள்
எழுதி அதைநான்
கவிதை என்றபோது
ஆஹா அருமை
என்று சொன்ன நண்பன்

கணக்கு வாத்தியார்
அடிக்கு பயந்து
கட்டுரை போட்டியில்
பங்கெடுத்து
பள்ளியில் முதலாய்
வந்த போது
சூப்பர்டா மச்சி என்று
சென்னை தமிழில்
நண்பன் சொன்ன
சீர்திருத்த வாழ்த்தை சொல்வதா?

வாழ்க்கையின் வழியில்
வலியின் மைல் கற்கள்

ஏனோ தெரியவில்லை
காலை நேரத் தனிமையிலே
எத்தனையோ எண்ணங்கள்

கதை கதை என்று
வாழ்க்கையிலே
எத்தனை பக்கங்கள்!

நான் எதை சொல்வது?
ஆசைகளின் பாதையில்
பயணங்கள் ...

கண் அயர்ந்தால்
கொன்று விடும் திருப்பங்கள்

நேற்று இருந்தது
இன்று இல்லை
இன்று இருப்பது
நாளை இருக்குமா

சுகமும் துக்கமும்
உறவுகள் !

இரண்டுமே மனதின்
திறவுகள்!
வாழ்க்கை விதியின்
விரிவுகள்...

எதை எழுதுவது?
எதை சொல்வது?
போகிறேன் ....
என் புத்தகம்
நானே எழுதுகிறேன்
நானே படிக்கிறேன் ....

Friday, March 13, 2009

சக்தி கொடு

நிழல் போலே இச் சோகம்
நெருடித்தான் வருகிறது
நிஜத் தீயின் வெப்ப நா
நீசத்தில் எரிக்கிறது

கனவாலே உருவாகி
காலமது செல்கிறது
காற்றாகும் நாள் வருமுன்
வெல்வேனா
சக்தியே சொல்!

கசை கொண்டு அடித்துஎனை
திசைநேர் நீ கொண்டுசெல்
களைபோலே வாழும் எனை
முளையருத்து தளையாக்கு

அம்மா நீ பெற்ற மகன்
அறிவிலியாய் வாழ்ந்திடலா?
அறிவின்றி அழிந்திடல் மேல்
அகம் திற அறிவு திற...
அருள் தருவாய் அன்னையே!

Thursday, March 12, 2009

விசும்பல்கள்

விடியும்...
கண் விழித்து பார்க்கையிலே
இருட்டு வரும் ...
குளிர் கால கோலத்தை
பனி போடும்

கனடா வாழ்க்கை
காலச் சக்கரத்தின்
வேகச் சுழற்சி
மனித நேயம்
மாயமாய் மறைந்த
வினோத வாழ்கை ...

நீயா நானா
வினாக்கள்
அளவுகோல் உறவுகள்
அகங்கார உணர்வுகள்

நெஞ்சுக்கு வலிக்கும்
புண்களை ஆற்ற
போதை மருத்துவம்
தலைவலி உறக்கம்
காலையில் கடவுள்
கண் மூடி வேக வேண்டுதல்கள்

பொங்கல், தீபாவளி, அது இதுவென்று ....
நைய புடைக்க
நாக்கின் தவங்கள்...

நாம் யார்
என்ற கேள்வி
நாயகமாய்...
வாழ்கையின் தெருக்களில்
வழி தெரியாமல்
ஒரு உற்சவம்!

அப்பாவின் வார்த்தைகள்
காதுகளில்...
இக்கரைக்கு அக்கரை பச்சை

என் சன்னலின் வழியே...

சொல்லத் தெரியாமல்
வந்து நின்ற காற்றை
சுவாசம் வரவேற்றது!

வானம் கண்களின் இமைகளானது...

நான் இயந்திர உலகின்
இந்திரன் ஆனேன்

நிதர்சனம்
சகிக்க முடியாத நிர்வாணம்

பொய்களின் போர்வையில்
புனிதம் பேசும் புது மனிதர்கள்..
மனிதன் மனிதன்தான்!
மற்ற விலங்கினச் சாயல்!
மாற்றவா இயலும்?

சுற்றி சுற்றி
வந்து நின்ற காற்று
சுவாசம் நிர்பந்த வரவேற்பு!

நேயம் ஒரு நியதி...
புணர்ச்சியின் புனிதம்.
மோகமுத்தங்கள்
பரிணாம தொடர்ச்சியாய்
பரிமானம் ஆனது!

உள்ளும் வெளியும்
ஒரு போராட்டம்!

மனிதன் மனிதன்தான்....